செய்திகள்

வங்கியில் வரிசையில் நின்றபோது முதியவர் பலியானது துரதிருஷ்டவசமானது: தமிழிசை

Published On 2016-12-04 07:55 GMT   |   Update On 2016-12-07 04:02 GMT
வங்கியில் வரிசையில் நின்றபோது முதியவர் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது. பணத்தட்டுப்பாட்டை போக்க வங்கி அதிகாரிகள் நிர்வாக முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழிசை கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெர்மனியில் நடைபெறும் ஆளும் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள தேசிய பா.ஜனதா கட்சி சார்பில் எனது தலைமையில் 5 பேர் குழு நாளை செல்கிறோம்.

சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று தமிழக பா. ஜனதா சார்பில் கனரக அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

துறையூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்து துயரமானது. உயிர் இழந்தவர்களுக்கு சரியான நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்கும் போது அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பாதுகாப்பாற்ற பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.

தஞ்சாவூர் அருகே வங்கியில் பணம் எடுக்க சென்ற முதியவர் உயிர் இழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அவருக்கு வரிசையில் நின்றவர்கள் உதவவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இது மனிதாபிமானம் அற்ற செயல்.

பணத்தட்டுப்பாட்டை போக்க வங்கி அதிகாரிகள் நிர்வாக முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News