செய்திகள்
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் இன்று, நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்து பேசிய காட்சி.

வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருபவர் ஜெயலலிதா: சரத்குமார்

Published On 2016-11-14 07:48 GMT   |   Update On 2016-11-14 07:48 GMT
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருபவர் ஜெயலலிதா என நடிகர் சரத்குமார் பேசினார்.
மதுரை:

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் இன்று சிலைமான், சிந்தாமணி, மேலஅனுப்பானடி, திருப்பரங்குன்றம், கைத்தறி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. எந்த ஒரு தலைவரும் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம்.

ஆனால் முதல்-அமைச்சர் அம்மா, தேர்தலின் போது கொடுத்த 176 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வளமான எதிர் காலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

எனவே அம்மாவின் ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கிறது.

முல்லை பெரியாறு, காவிரி, இலங்கை தமிழர் பிரச்சனைகளில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய தி.மு.க., இன்று மக்களை சந்தித்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் கலர் சட்டைகளை போட்டுக்கொண்டு கடை, கடையாக டீ குடித்து நாடகம் போடுகிறார். அதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அடுத்த தலைமுறைக்கான திட்டங்களை செயல்படுத்திவரும் முதல்-அமைச்சர் அம்மா, பூரண நலத்துடன் விரைவில் மீண்டும் மக்கள் பணியை தொடர வருகிறார்.

நேற்று முதல்-அமைச்சர் அம்மாவின் அறிக்கை வெளிவந்த பின்பு மக்களின் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று ஒரு தீபாவளியை கொண்டாடியதுபோல மக்கள் இன்பமடைந்தனர். எனவே திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News