செய்திகள்

முதியோருக்கு அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Published On 2016-08-17 05:53 GMT   |   Update On 2016-08-17 10:16 GMT
தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் பல முதியவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் பல முதியவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் உண்மையில் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இந்த திட்டம் சென்றடையாமல், ஆளும் தரப்பினருக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குமாக மாறும் திட்டமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழக அரசுக்கு பற்றாக்குறையான கடன்தொகை 2.50 இலட்சம் கோடி வரி பற்றாக்குறை, 10,000 கோடி இலவச திட்டத்துக்கு தேவையான தொகையுடன் சேர்த்து சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய் பற்றாகுறையை சரிகட்ட முடியாத அரசாக உள்ளது. வெறும் ரூ.92,000 கோடி ரூபாய் வருமானத்தை வைத்துக்கொண்டு முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதை சரிவர தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வெற்று இலவசங்களை அறிவித்து தமிழகத்தை மேலும் கடன் சுமை கொண்ட அரசாக மாற்றியதே அதிமுக அரசின் சாதனை. இன்றைய நிலையில் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் 35,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது, வரும் ஆண்டுகளில் 50,000 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக இந்திய பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே அரசின் வருமானத்தை உயர்த்தி உண்மையில் வருமை கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களை காப்பாற்ற, இந்த அரசு முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

பத்திரிக்கைகளும், அரசியல் ஆர்வலர்களும் சொல்லும் பொழுதும், எதிர்கட்சிகள் சட்டசபையில் இந்த பிரச்சனை பற்றி பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்களின் கோரிக்கைக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அரசு செவி சாய்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News