செய்திகள்
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த மத்திய பட்ஜெட்- பங்குச்சந்தைகள் உயர்வு
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்தன.
மும்பை:
பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், சுகாதாரம், வாகனம் மற்றும் உள்கட்டமைப்பு, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்கள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தின. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2315 புள்ளிகள் உயர்ந்து, 48,601 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 5 சதவீத உயர்வு ஆகும். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 14 ஆயிரத்தை கடந்து வர்த்தகம் ஆனது. வர்த்தக முடிவில் 646 புள்ளிகள் உயர்ந்து 14,281 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 4.74 சதவீத உயர்வு ஆகும்.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எல் அன்ட் டி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன.