லைஃப்ஸ்டைல்
சமூக ஊடகமும், போலியான வாழ்க்கையும்

சமூக ஊடகமும், போலியான வாழ்க்கையும்

Published On 2021-06-01 08:16 GMT   |   Update On 2021-06-01 08:16 GMT
சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும், தகவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் ‘லாக்டவுன்' வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தாங்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்கிறோம் என்று காட்டிக்கொள்ள பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதால்தான் இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக தங்களுடைய மனநிலையையும், பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

டென்மார்க்கின் மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம் இதுசம்பந்தமான ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. அதில், மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் மெய்நிகர் உலகத்தில் தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறார்கள், ஆய்வாளர்கள்.

அவர்களது கருத்துப்படி, சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும், தகவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் அதிகரித்துவருகிறார்கள்.

மற்றவர்களிடம் அப்படிக் காட்டிக்கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள் என கூறப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News