லைஃப்ஸ்டைல்
சொத்துக்கு பட்டா தேவையா?

சொத்துக்கு பட்டா தேவையா?

Published On 2021-04-29 03:29 GMT   |   Update On 2021-04-29 03:29 GMT
சொத்துகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும், சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது.
நீங்கள் புதிதாக வீடு, மனை என சொத்து வாங்கியிருக்கிறீர்களா, அந்த சொத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த ஆவணத்தை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா, பத்திரவுப் பதிவு மட்டும் இருந்தால் போதுமா, அந்தச் சொத்துக்குரிய பட்டா வைத்திருக்கிறீர்களா?

சொத்துகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும், சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். சரி, சொத்துக்கான பட்டாவை யாரிடம் எங்கே பெறுவது?

பட்டா வழங்குவது வருவாய் துறைக்குக் கீழ் வருகிறது. எனவே வருவாய் துறையில்தான் பட்டாக்களைப் பெற வேண்டும். பட்டா பெறுவதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) மனுக்களை வழங்க வேண்டும். நீங்கள் அளிக்கும் மனுவுடன், ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும். மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.

இந்த மனுவின் மீது தனது அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ. சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார். ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்கு பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள்.

சரி ஏன் பட்டா வேண்டும், பட்டா இல்லாவிட்டால் என்னவாகும்? ஒருவர் அதிகார பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கும் காலம் இது. அவ்வாறு சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்கு சென்றால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தை பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக்கொண்டுவிட்டால், அந்தப் பிரச்சினை இருக்காது.

தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏராளமான மனை போட்டு விற்கிறார்கள். உதாரணமாக 50 மனைகளை விற்கிறார் என வைத்துக்கொள்வோம். பிளாட்டுகளை பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். அந்தச் சொத்துக்கு பட்டா பெறவில்லை என்றால் என்னவாகும், அந்த 50 மனைகளில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புண்டு. 50 மனைகளில் ஏதாவது 10 மனைகள் அப்படி ஒதுக்கப்பட்டுவிடலாம்.

அது தெரியாமல் பதிவுப் பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்ட செல்லும்போது தான், தனது மனை பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது தெரியவரும். எனவே, பத்திரப் பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக்கொண்டால், இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.
Tags:    

Similar News