லைஃப்ஸ்டைல்
பெண்களின் சுகாதாரமும்.. சுதந்திரமும்..

பெண்களின் சுகாதாரமும்.. சுதந்திரமும்..

Published On 2021-01-13 04:27 GMT   |   Update On 2021-01-13 04:27 GMT
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கையில் பெண்களை மையப்படுத்தி ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மாதவிடாய் சுகாதாரம், ஸ்மார்ட்போன் பயன்பாடு, ஊதியம், சொத்து உரிமை, முடிவெடுக்கும் சுதந்திரம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

1. மாதவிடாய் கால சுகாதாரம்: மிசோரமை தவிர பெரும்பாலான மாநிலங்களில் மாதவிடாயின்போது பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் மாதவிடாய் கால சுகாதாரத்தை முழுமையாக பின்பற்றுவது குறைவாகவே இருக்கிறது. பீகாரில் மாதவிடாய் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அங்கு ஒட்டுமொத்தமாக 58.8 சதவீத பெண்கள்தான் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். அதிகபட்சமாக திரிபுராவில் 68.8 சதவீத பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக அசாம் (66.3 சதவீதம்), குஜராத் (65.8 சதவீதம்), மேகாலயா (64.9 சதவீதம்) போன்ற மாநிலங்கள் உள்ளன.

2. ஸ்மார்ட்போன் பயன்படுத்துதல்: ஜம்மு காஷ்மீரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 48.9 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். கோவாதான் ஸ்மார்ட்போனை அதிகம் உபயோகிக்கும் பெண்களை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. அங்கு 91.2 சதவீத பெண்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்தில் 88.6 சதவீத பெண்கள் ஸ்மார்ட்போன் பயன் படுத்துகிறார்கள்.

3. ஊதிய மாறுபாடு: பெரும்பாலான துறைகளில் ஆண்கள் பார்க்கும் அதேவேலையை பெண்களும் செய்கிறார்கள். ஆனாலும் ஆண் களோடு ஒப்பிடும்போது பெண்களின் சம்பள விகிதம் குறைவாகவே இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் பார்க்கும் வேலைக்கு ஊதியமாக பணத்திற்கு பதிலாக பொருட்களை பெறும் நிலையும் இருக்கிறது. லட்சத்தீவில் 10.9 சதவீத பெண்களே ஊதியத்தை பணமாக பெறுகிறார்கள். அதுபோல் ஊதியம் பெறும் பெண்களின் எண்ணிக்கை ஜம்மு காஷ்மீரில் 18.4 சதவீதமாகவும், பீகாரில் 12.6 சதவீதமாகவும், அசாமில் 19 சதவீதமாகவும் இருக்கிறது.

4. சொத்து உரிமை: கணக்கெடுப்பு நடந்த பெரும்பாலான மாநிலங்களில் சொத்துக்களின் உரிமையாளர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலை வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கிறது. திரிபுராவில் சொத்து வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை 57.3 சதவீதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே 17.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதுபோல் மிசோரமில் 20.8 சதவீதம் பெண்கள்தான் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். சொத்துரிமை சட்டம், ஆண் களுக்கும்-பெண்களுக்கும் சம உரிமைகளை அளிக்கிறது. ஆனாலும் நிலத்தையோ, வீட்டையோ பெண்கள் பெயரில் பதிவு செய்யும் வழக்கம் குறைவாக இருப்பதை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. லடாக்கில் 72.2 சதவீதம் பெண்கள் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகாவில் 67.6 சதவீதம் பெண்கள் நிலம் அல்லது வீட்டிற்கு உரிமையாளராக இருக்கிறார்கள்.

5. முடிவெடுக்கும் சுதந்திரம்: சுயமாக முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. பீகாரில் 86.5 சதவீத பெண்கள் எந்த தலையீடும் இல்லாமல் முடிவுகளை எடுக்கிறார்கள். அது மிசோரமில் 98.8 சதவீதமாகவும், நாகலாந்தில் 99 சதவீதமாகவும் இருக்கிறது. உடல் நலம், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவது, உறவுகளை சந்திப்பது போன்றவற்றை மையப் படுத்தி இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News