பெண்கள் உலகம்
குடும்ப சண்டை

விவாதங்களால் குடும்ப ரகசியங்கள் காற்றில் பறக்கும்

Published On 2020-08-12 13:30 IST   |   Update On 2020-08-12 13:30:00 IST
‘கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது’ என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள்.
‘கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது’ என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள். கடுமையான விவாதங்களைப் பற்றியும், அதனால் உருவாகும் பின்விளைவுகள் குறித்தும் அவர்கள் விளக்குகிறார்கள்!

* விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். அதனால் குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களைகூட பெரிதாக்கி திசை திருப்பிவிட்டுவிடும்.

* விவாதம் கடுமையாகும்போது கோபம் தோன்றும். அது தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய வார்த்தைகள் தம்பதிகளிடையே ஆறாத வடுவை உருவாக்கிவிடும்.

* தம்பதிகளில் சிலர் விவாதத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சக்தியாக கருதுகிறார்கள். ஆனால் அது ஒரு கத்தியைப் போன்றது. வீண் சண்டையை வளர்த்து மனவருத்தத்தை உருவாக்கிவிடும்.

* இணையிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச நினைப்பவர்கள், முதலில் அதற்கான சூழ்நிலைக்காக காத்திருக்கவேண்டும். எரிச்சலான மனநிலையில் இருக்கும்போது ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை பெரும்பாலும் மோதலில் தான் முடியும்.

* ஒருவர் எரிச்சலாக பேசினாலும் அவர் பேசுவதை முழுமையாக காதுகொடுத்து கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வருவார்.

* தம்பதிகள் தங்கள் வாதத்திறமையை வெளிக்காண்பிக்க நினைக்கக்கூடாது. ஒருவர் கருத்தில் நியாயம் இருந்தால் அதை புரிந்துகொண்டு ஆமோதிக்கவேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால் உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

* பேச்சு, விவாதமாகிவிட்டால் வார்த்தைகளில் மிகுந்த கவனம்காட்டுங்கள். விவாதத்தை தேவையில்லாமல் வளரவிடாதீர்கள்.

* உங்கள் கருத்தையும், அதில் இருக்கும் நியாயத்தையும் உங்கள் இணை புரிந்துகொள்ளாதபோது கொஞ்சம் அமைதி காப்பதே சிறந்தது. உங்களுடைய கருத்து அவமதிக்கப்பட்டால், அந்த மன வருத்தத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. தனது கருத்து என்றாவது ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினையை பக்குவமாக கையாண்டால் உங்கள் கருத்துகள் இணையை சிந்திக்கவைக்கும்.

* தனக்குதான் எல்லாம் தெரியும். தன் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவ்வளவுதான் என்பதுபோல் ஒருபோதும் ஆணவத்தோடு நடந்துகொள்ளா தீர்கள். தனது இணையும் அவர் அளவுக்கு விஷய ஞானம் உள்ளவர்தான் என்பதை எப்போதும் மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கும் மனநல நிபுணர்கள் “கணவன்-மனைவி இருவருமே ஒருவர் சொல்வதற்கு இன்னொருவர் ஆமாம் போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமான விஷயமல்ல. சிந்திக்கவே தெரியாதவர்கள்தான் அப்படி ஆமாம் போடுவார்கள். அதனால் குடும்பம் நன்றாக செயல்பட இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவேண்டியது அவசியம்” என்று சொல்கிறார்கள்.

கணவன்- மனைவி இடையே எழும் விவாதங்கள் பற்றி, அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் ‘மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கிடையே அதிக விவாதம் நடப்பதில்லை. பிரிந்துவாழும் தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் பிரிவிற்கு வீண்விவாதம்தான் காரணமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது. 

Similar News