லைஃப்ஸ்டைல்
சினைப்பை நீர்க்கட்டிக்கு சித்த மருத்துவம்

சினைப்பை நீர்க்கட்டிக்கு சித்த மருத்துவம்

Published On 2021-10-01 04:42 GMT   |   Update On 2021-10-01 04:42 GMT
சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி ( PCOS ) இருக்கும் போது கருவுறுவது இல்லை. இன்றைய இளம் தம்பதியரிடையே குழந்தையின்மை அதிகமாக இருப்பதற்கு ( PCOS ) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

கழற்சிக்காய்த்தூள் 1 கிராம் உடன் 5 மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர கருப்பையில் உண்டாகும் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.

கருஞ்சீரகம் 1 கிராம் , சோம்பும் 1 கிராம் அளவிற்கு சம அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2கிராம் அளவு தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி கரையும். மேலும் கருப்பையின் குற்றம் அகலும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் சூதகவலி குற்றங்கள் குறையும்.

சோற்றுக்கற்றாழையை மேல்தோல் நீக்கிவிட்டு அதில் உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக 7 முறை கழுவிட்டு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு 1 டம்ளர் மோரில் கலக்கி வாரம் இருமுறை குடித்துவர சினைப்பை நீர்க்கட்டி குறையும். நம் உடலில் உள்ள ஹார்மோனை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

எள் - 1 கிராம், வெந்தயம் - 1 கிராம் சமஅளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு காலை மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சினைப்பை நீர்க்கட்டி கரையும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் எனும் ஹார்மோனை ஒழுங்குப்படுத்தும்.

கொள்ளு 1 கிராம், மஞ்சள் கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன் இந்த அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் கசாயம் செய்து குடித்துவர நீர்க்கட்டி குறையும்.

வெட்சி பூ - 1 கொத்து, மிளகு - 5 (தூள் செய்து) இதனை குடிநீரிட்டு 60 மில்லி காலை மட்டும் 3 மாதம் தொடர்ந்து குடித்துவர கருப்பை குற்றம் குறையும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் வராமல் தடுக்கும். கர்ப்பபைபுற்றுநோய் வராமல் தடுக்கும்.

இலவங்கப்பட்டை 2 கிராம், அதிமதுரம் - 1 கிராம் இந்த அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மட்டும் 1 கிராம் அளவு எடுத்து வைத்துக்கொண்டு கசாயமிட்டு 60 மில்லி குடித்து வர கருப்பை குற்றம் நீங்கி சினைப்பை கட்டி அகலும்.

சுக்கு - 1 கிராம், பெருங்காயம் - 1 கிராம் அதாவது சுக்கை தோல் நீக்கி இளவறுப்பாக எடுத்துக்கொண்டு அதனுடன் பொரித்த பெருங்காயம் சமஅளவு சேர்த்து வைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை 1 கிராம் அளவு தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி அகலும்.

மலைவேப்பிலைச்சாறு 60 மில்லி புதிதாக சாறு எடுத்து மாதவிடாயின்போது 3 நாளும் தினம் காலை 60 மில்லி உணவிற்குப் முன் அருந்திவர கருப்பையில் உண்டாகும் கட்டி சினைப்பை நீர்க்கட்டி நீங்கும். குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்களும் இதை அருந்திவருவது நல்லது. இது கருப்பையில் உண்டாகும் மலட்டு புழுவை அகற்றும்.

கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இவைகளை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு 1 கிராம் அளவு எடுத்து வெல்லம் சேர்த்து கசாயம் செய்து காலை மாலை இருவேளை 60 மில்லி அருந்திவர பெண்களுக்கு கருப்பைக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம். நம் உடலில் இன்சுலின் ஹார்மோனை சரியான அளவில் வைத்துக்கொள்ளும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இயல்பான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
Tags:    

Similar News