லைஃப்ஸ்டைல்
பெண்களைத் தாக்கும் நோய்

பெண்களைத் தாக்கும் நோய்களும்.. தடுக்கும் வழிகளும்..

Published On 2021-09-06 08:29 GMT   |   Update On 2021-09-06 08:29 GMT
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?

மாதவிடாய் கால வலி இரண்டு வகை

மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.

மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.

இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.

செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.

தடுக்கும் வழி

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.

சிகிச்சை

வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தாலும், வாழ்வியல் முறைகளாலும் ஏற்படுகிறது. பாரம்பரியத்தால் ஏற்படுவது குறைவு. வாழ்வியல் முறைகளால் ஏற்படுவது அதிகம். ஆனாலும் சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடித்து வரையறை செய்யவில்லை. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் வித்தியாசங்கள்- மாமிசம், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளின் பயன்பாடு- அதிக உடல் எடை- சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்- மிக தாமதமாக மெனோபாஸ் நிலையை அடைதல்- மதுப்பழக்கம்- புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்ததால் ஏற்படும் பாதிப்பு போன்றவைகள் காரணங்களாக வரிசைப் படுத்தப்படுகின்றன.

இளம்பெண்கள்தான் புகைப்பிடிப்பதால் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புகைப் பிடிக்காவிட்டாலும், அந்த புகையை நிரந்தரமாக சுவாசிப்பவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்கு வயது ஏறும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம், மாதவிலக்கு நிலைத்துப்போவதற்கான அறிகுறிகள், அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிலக்கு சுழற்சிமுறை, மாதவிலக்கு கோளாறுகள் போன்றவைகளுக்கான சிகிச்சையில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆகிவிடுகிறது.

அதிக காலம் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு களை உருவாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், தைராய்டு பாதிப்புகொண்டவர்களையும், இந்த நோய்த்தாக்கும் அபாயம் அதிகம். அதிக உடல் எடைகொண்ட முதிய பெண்களையும் இந்த நோய் தாக்கலாம்.

தடுக்கும்வழி

திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதும், அதற்கு தாய்ப்பால் புகட்டுவதும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை பெருமளவு குறைக்கும். பாலை உற்பத்தி செய்யும் புரோலாட்டின் உற்பத்தியால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதுதான் இதற்கான காரணம்.

சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்துவர வேண்டும். வயதுக்கு வராவிட்டாலும், அதற்காக 18 வயது வரை காத்திருக்கவேண்டும். 18 வயதிற்கு முன்பு சிகிச்சை மூலம் மாதவிலக்கை உருவாக்காமல் இருக்கவேண்டும்.

சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை உருவாகாமல் கவனித்துக்கொள்வது அவசியம். குண்டானவர்கள் சிறுவயதில் இருந்தே அதில் கவனம் செலுத்தி, எடையை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். மார்பக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகம். பாரம்பரியமாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகொண்ட பெண்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மிகுந்த விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்தவேண்டும்.

சிகிச்சை

தொடக்கத்தில் கண்டறிந்துவிடுவதே விரைவான சிகிச்சைக்கு வழிவகுக்கும். அதனால் அனைவரும் இதில் விழிப்புணர்வு பெறுவதே மிக முக்கியம். மார்பகங்கள் சரியான அமைப்பில் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். குளிக்கும்போதோ, உடைமாற்றும்போதோ சுயபரிசோதனை மூலம் எந்த விதமான கட்டிகளும் மார்பகத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். மேமோகிராபி பரிசோதனை மூலம் திசுக்களை ஆய்வு செய்து நோயை கண்டறிய முடியும். அதனால் 40 முதல் 45 வயதுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 45 முதல் 55 வயதுகளில் வருடத்திற்கு ஒருமுறையும் மேமோகிராபி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நோய் தென்பட்டால் அதனை குணப் படுத்த நவீன சிகிச்சைகள் உள்ளன.

கருப்பை வாய் புற்றுநோய்

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும். குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன் படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

தடுக்கும் வழி

புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.

இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.

ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனை களையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
Tags:    

Similar News