லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கவலை

நோய் இல்லை ஆனால் பயம் உண்டு... பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கவலை...

Published On 2021-06-28 06:26 GMT   |   Update On 2021-06-28 06:26 GMT
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது.
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
Tags:    

Similar News