பெண்கள் உலகம்
பெண்களின் ஆயுட்காலம்

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது ஏன்?

Published On 2021-05-28 10:01 IST   |   Update On 2021-05-28 10:01:00 IST
கனடா நாட்டின் மருந்து சங்க ஜார்னலில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஆயுட்காலம் சார்ந்த விஷயத்தில் என்னென்ன வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதுமை பருவத்தை எட்டும்போது பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுகிறார்கள். ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனை சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வும் உறுதிபடுத்தி இருக்கிறது. கனடா நாட்டின் மருந்து சங்க ஜார்னலில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஆயுட்காலம் சார்ந்த விஷயத்தில் என்னென்ன வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 28 நாடுகளை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள்.

ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படும் கலாசார மரபுகள், பொருளாதாரம், சமூக மாற்றங்கள், வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு நாட்டில் வசிப்பவர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மாறுபடுவதும், ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் வெளிப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இறப்பு அபாயத்தின் இடைவெளி பல்வேறு நாடுகளில் வேறுபடுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களை ஒப்பிடுகையில் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள் என்பதும், பெண்களை விட ஆண்களுக்கு இறப்பு அபாயம் 60 சதவீதம் அதிகம் இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், இதய நோய் இந்த இரண்டும் ஆண்களின் ஆயுட்காலத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பாதிப்புகளை பெண்கள் குறைந்த அளவிலேயே எதிர்கொள்கிறார்கள். அதுதான் இறப்பு அபாயத்தை குறைத்து அவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்ய உதவுகிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

Similar News