லைஃப்ஸ்டைல்
சத்தம் இல்லாமல் முத்தம் கொடுங்கள்

சத்தம் இல்லாமல் முத்தம் கொடுங்கள்

Published On 2020-09-23 07:11 GMT   |   Update On 2020-09-23 07:11 GMT
கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது.
முத்தம் அன்பின் வெளிப்பாடு. தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான், ஒரு குழந்தையின் வாழ்க்கை தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில், ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது. இந்த இரண்டு முத்தத்திற்கும் இடைப்பட்டதே மனிதன் வாழும் காலம். இதில் வேடிக்கை என்ன வென்றால், முதல் முத்தம் பெறும்போது, குழந்தைக்கு முத்தம் என்றால் என்னவென்று தெரியாது. அந்த முத்தத்தின் சுவையை தாய்தான் அனுபவிக் கிறாள். கடைசி முத்தம் பெறும்போதும், உயிரற்ற உடல் அந்த முத்தத்தின் சுவையை உணர நியாயம் இல்லை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும் சத்தற்ற முத்தங்கள்தான் பெரும்பாலும் சத்தங்களை எழுப்புகின்றன.

‘அன்பு, நம்பிக்கை ஆகிய இரண்டையும், உதடுகள் மூலமாக இன்னொருவரிடம் கொண்டுபோய் சேர்ப்பதே முத்தம்’ என்கிறது முத்த தத்துவம்.

‘‘நீங்கள் ஆன்மாவை பார்க்கவேண்டும் என்றால், காதலியின் உதடுகளை பார்த்தால் போதும்” என்று முத்தத்திற்கு முகவரி கொடுத்திருக்கிறார், ஆங்கிலேய கவிஞர் ஷெல்லி.

‘வானத்தை மலைகள் முத்தமிடுகின்றன. அலைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, எந்நேரமும் முத்தமிட்டபடியே ஓடிவிளையாடுகின்றன. சூரியன் பூமியை முத்தமிடுகிறது.. இப்படி இயற்கை முத்தத்தோடு இணைந் திருக்கிறது. மனிதர்களில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடும்போது, உடலுக்கு ஏற்படும் ரசாயன மாற்றம் விவரிக்க இயலாதது. விருப்பத்தோடு முத்தமிடும்போது இருவர் உடலும் பூப்போல் மலர்கிறது. அதனால்தான் உடலில் இருக்கும் அன்பு சுரப்பிகள், முத்தங்களுக்காக ஏங்குகின்றன.

உதடுகளின் செயல்பாடு மட்டுமே முத்தம் அல்ல. உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் முத்தம் முழுமையடைகிறது. முத்தத்திற்கு பல முகங்கள் இருக்கின்றன. கணவனாக இருந்து கசப்பை மறக்கவைக்கும். காதலாக இருந்து இனிக்கவைக்கும். வேதனைப்படும்போது ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் தரும். ‘விட்டுத்தொலை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தேறுதலைத் தரும். வலியை, விரக்தியை போக்கடிக்கும். உயிரை விடும் எண்ணத்தில் இருப்பவர்களைக்கூட ஒரு முத்தம் காப்பாற்றி விடக்கூடும். அதனால்தான் முத்தத்திற்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதையும் வகைப்படுத்தி ‘எக்ஸ்கிமோ கிஸ்’, ‘ஸ்பைடர் மேன் கிஸ்’, ‘ஏஞ்சல் கிஸ்’, ‘பிளையிங் கிஸ்’ என்று அழகழகான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. கைகளில் முத்தம் கொடுப்பது, ‘ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்’ என்று நம்பிக்கை கொடுப்பதாகும். தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது. போகப்போக அது சூறாவளியாக வீசத் தொடங்குகிறது. வங்கியில் பணம் போடும்போது வட்டியோடு சேர்த்து கிடைக்கும் என்பதுபோல் முத்தத்திற்கும் வட்டி உண்டு. கொடுக்கும் முத்தம் வட்டியோடு சேர்ந்து வளமாக திரும்ப கிடைக்கும். அன்பு மனது நிறைய இருந்து என்ன பயன்? அதை முத்தமாக கொடுக்கும்போதுதான், அன்பு நிரூபணமாகும். முத்தம் அன்பை அதி கரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் இஇரத்த  அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களைச் செய்யும்.

டெல்லியைச் சேர்ந்த பாட்டி ஒருவருக்கு, 100 வயது. தாத்தா அதையும் தாண்டிவிட்டார். அவர்களை வாழ்த்த சென்ற டாக்டர் ஒருவர், “உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். பாட்டி “முத்தம்” என்று சத்தமாக பதிலளித்தார்.

டாக்டர் சுதாரித்துக்கொள்ள முடியாமல் தடுமாற, பாட்டியே தொடர்ந்தார். “எங்களுக்குள் இருக்கும் அன்பை, இருவரும் முத்தத்தின் மூலம் பங்குவைத்துக்கொள்வோம். அது வீட்டையே அன்பு மயமாக்கும். அன்புள்ள வீட்டில் அமைதி தவழ்ந்து விளையாடும். அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

அந்த டாக்டருக்கு புது மருந்து கிடைத்தது. உங்களுக்கு?
Tags:    

Similar News