லைஃப்ஸ்டைல்
கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்​

கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்​

Published On 2020-04-06 03:57 GMT   |   Update On 2020-04-06 03:57 GMT
கருக்குழாய் அடைப்பு என்றால் என்ன? அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையின்மைக்கான காரணங்களில் சுமார் 40 சதவிகிதப் பெண்களைப் பாதிக்கிற பிரச்னை கருக்குழாய் அடைப்பு. அப்படி என்றால் என்ன? அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன், கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கருப்பைக்கும் இரண்டு கருக்குழாய்கள் உண்டு. இக் கருக்குழாய் நான்கு கூறுகளாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. கருப்பை - உள் இருக்கும் பகுதி (Intra Mural Segment / Cornual Segment)
2. இடை இணைப்புப் பகுதி (Isthmial Segment)
3. குடுவைப் பகுதி (Ampullary Segment)
4. மருவிகள் பகுதி (Fimbrial Segment).

இதில் கருக்குழாயில் உள்ள துவாரம், கருப்பை உள்ளிருக்கும் பகுதியிலும் இடை இணைப்புப் பகுதியிலும் மிகக் குறுகியதாகவும் குடுவை பகுதியிலும் மற்றும் மருவிகள் பகுதியிலும் சற்று விரிந்தும் காணப்படும். கருக்குழாயின் துவாரம் (Lumen) அடர்ந்த உயிர்மங்கள் (Cells) உடையதாக இருக்கும். இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த உயிர்மங்கள் பலதுக்கும் நுண்ணி மயிரிழைகள் (Cells) என்று சொல்லப்படும் சிறு மயிரிழை இணைப்பகங்கள் உண்டு. இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மயிரிழைகள் எப்போதும் கருப்பையை நோக்கி அசைந்து கொண்டு இருக்கும்.

கருக்குழாயின் முக்கிய பணிகள்...

1. கருமுட்டையைக் கைப்பற்றுவது
2. ஆண் விந்தணுக்களை கருமுட்டையிடம் சேர்த்து கருத்தரிக்கச் செய்வது.
3. சிசு (Embryo) உருவாகிய பின் அதைப் பாதுகாத்து கருப்பைக்குள் சேர்ப்பது.

கருவணுவகத்திலிருந்து (Ovary) கருமுட்டை உருவானதும் கருக்குழாயின் மருவிகள் பகுதி சினைப்பையைச் சூழ்ந்து கொள்ளும். கருமுட்டை வெளிப்படும்போது அதைக் கைப்பற்றி உள்ளிழுத்துக் கொள்ளும். இவ்வாறு கருக்குழாயை அடைந்து குடுவைப் பகுதியில் 2 - 3 நாள் வரை தங்கியிருந்து முழுமையான வளர்ச்சியை அடையும். ஆண் விந்துக்கள் கருமுட்டையை இப்பகுதியில்தான் கருவுறச் செய்யும் (Fertilization). இப்படி கருவுற்ற கருமுட்டை பகுப்படைந்து சிசு ஆகிறது.

8லிருந்து 16 உயிர்மங்களாகப் (8-16 Cell Stage) பிரிந்து இந்தச் சிசு கருக்குழாயில் இருக்கும் மயிரிழை உயிர்மங்களின் அசைவுகளாலும் கருக்குழாய்ச் சுவரின் தசைகளின் சுருக்கங்களாலும் கருப்பையை அடைந்து கருப்பையினுடைய படல உறையில் தன்னைப் பதித்துக் கொண்டு வளர்கிறது. கருக்குழாயில் உண்டாகும் நோய்களும் அதன் விளைவுகளும் கருக்குழாய் நோய்களில் முதன்மையானது நுண்கிருமிகளால் இடுப்புப் பகுதியில் (Pelvis) ஏற்படும் அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease).

இப்போது பால்வினை (Sexually Transmitted Diseases) நோய்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிளமைடியா ட்ரக்கோமேடிஸ் (Chlamydia Tracomatis) என்கிற நுண்கிருமியும் நைசீரியா குனோரியா (Neissieria Gonnorhoea) என்கிற நுண்கிருமியும் 40 சதவிகிதம் பால்வினை நோய்களை ஏற்படுத்தி கருக்குழல் சிதைவுக்குக் காரணமாகின்றன. மேலும் மைக்கோபேக்டீரியம் ஹோமினிஸ் (Mycobacterium Hominis), யூரோபிளாஸ்மா யூரோலைட்டிகம் (Ureaplasma Urealyticum), ஹீமோபிளஸ் இன்புளூயென்ஸா (Hemophilius Influenza) போன்ற நுண்கிருமிகளும் 2-3 சதவிகிதம் குழலின் சிதைவுக்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் பல கிருமிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்த் தன்மைக்குக் காரணமாகலாம். இப்படி வரக்கூடிய நோய்கள் பிறப்புறுப்பு வழியாகக் கருப்பைக் குழியை (Endometrium) அடைந்து அங்கிருந்து கருக்குழாயை அடைகிறது.

சில நேரங்களில் இந்த நுண்கிருமிகள் ரத்த நாளங்கள் (Arteries) மூலமாகவோ, ரத்தச் சிரைகள் (Veins) மூலமாகவோ அல்லது நிணநீர் (Lymph) மூலமாகவோ கருக்குழலை அடைந்து சேதத்தை ஏற்படுத்தக் கூடும். பெருங்குடலில் ஏற்படும் நோய்களும், குடல்வாலில் ஏற்படும் நோய்களும் கருக்குழலை பாதிக்கக்கூடும். சிலருக்கு கருச்சிதைவு செய்த பின்னரோ, முதல் குழந்தை பிறந்த பிறகோ அல்லது தகுந்த காரணம் இல்லாத நிலையிலும் இந்நோய் பாதிப்பு உருவாகலாம்.

பெண்கள் கருவுறாமல் இருக்க கருக்குழாயில் பொருத்தப்படும் காப்பர்-டி (Cu-T) போன்ற சாதனங்களும் தூய்மையான நிலைகளில் போடப்படாவிட்டால் இந்நோய்கள் உருவாகலாம். மேலும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) என்று சொல்லப்படும் ரத்தக் கட்டிகளும் கருக்குழாயை பாதிக்கக்கூடும். இந்த நுண்கிருமிகள் கருக்குழலின் உயிர்மங்களின் மயிரிழைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி சளிப்படலங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. மேலும், கருக்குழலின் துவாரத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருவுறாமைக்கு முக்கிய காரணமாகிறது.

மேலும் இப்படி வரக்கூடிய நோய்கள் கருக்குழாயிலிருந்து வெளிப்பட்டு கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறையை (Peritonium) அடைந்து கருக்குழாய் குடல்களோடு ஒட்டச் செய்து அதன் இயக்கத்தை தடுத்துவிடுகிறது. இப்படி ஏற்படக்கூடிய நோய்கள் கருக்குழலின் தசைகளில் நீர்க்கட்டுகளை (Hydrosaiphinx) ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இவை நீர்க்கட்டிகளாகவும் இருக்கலாம். கருக்குழலின் மருவிகள் அல்லது குடுவைப் பகுதிகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.

இது கருக்குழல் துவாரத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையான அடைப்பையோ உண்டாக்கி கருக்குழலில் உள்ள தசைகளுக்கும் சளிப்படலங்களுக்கும் உயிர்மங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி கருக்குழல் வீக்கங்களுடன் காணப்படுகிறது. மிகக் கடுமையாக இந்நோய்த் தாக்கப்பட்டால் உயிர்மங்களின் மயிரிழைகள் அசையாத் தன்மையோடு அல்லது அனைத்தும் சேதமடைந்து காணப்படலாம்.

இப்படி கருக்குழாயின் துவாரங்களுக்கு ஏற்படும் அடைப்புகளே கருவுறாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. நுண்கிருமிகளால் ஏற்படும் இடுப்புப்பகுதி நோய்களுக்கு அவ்வப்போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டால் கருவுறாமை தன்மையின் சதவிகிதம் குறைந்துவிடும்...’

கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News