லைஃப்ஸ்டைல்
தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று

தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று

Published On 2020-01-27 02:45 GMT   |   Update On 2020-01-27 02:45 GMT
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
பசு, எருமை மாடுகளின் பாலை காட்டிலும் ஆட்டுப் பால் கூடுதல் மருத்துவ குணங்கள் கொண்டது. மாடுகளின் பாலை அருந்துவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். ஆனால் ஆட்டுப்பால் தாய்ப்பாலை ஒத்திருப்பதால் அது போன்ற ஒவ்வாமை ஏற்படுவதில்லை. ஆல்பா எஸ்-1 கேசின் எனும் புரதத்தின் அளவு மாட்டுப் பாலில் அதிகமாக இருப்பதாலேயே இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.

ஆனால், ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்-2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. மாட்டுப் பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை செரிப்பதற்கு லாக்டேஸ் எனும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிக குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமலோ இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் அவதிப்படுகின்றனர். ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை.

ஆட்டுப்பாலில் கொழுப்பு மூலக்கூறுகள் மிதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாக ஏதுவாகிறது. ஆட்டுப்பால் அருந்துவதால் இரும்புச் சத்து எளிதில் கிடைக்கிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தி வந்தால் பசி, ஜீரணிக்கும் திறன் அதிகரிக்கிறது. நாள்பட்ட வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு ஆட்டுப்பால் உதவி புரிகிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்றாக தூங்குவதுடன், ஆரோக்கியமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் கொடுப்பதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர் வினைப்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளது போலவே, ஆட்டுப்பாலிலும் அதிகம் காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

மாட்டுப்பால் அருந்துவதைவிட ஆட்டுப்பால் அருந்துவதால், குறைந்த அளவே சளி உருவாகிறது. எனவே, ஒவ்வாமை, சுவாச நோய்களால் அவதிப்படுவர்கள் ஆட்டுப்பால் அருந்துவது நல்லது. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பு போன்றே இருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேக்ரைடு எனும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் காணப்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது.
Tags:    

Similar News