லைஃப்ஸ்டைல்
பெண்களே உங்களை வருத்திக்கொள்ளாதீர்

பெண்களே உங்களை வருத்திக்கொள்ளாதீர்

Published On 2019-12-04 03:22 GMT   |   Update On 2019-12-04 03:22 GMT
குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தவையெல்லாம் போதும், இனியாவது உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் கவனம் செலுத்தி, சமநிலையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..
பெண்களின் வாழ்க்கை, முதலில் அப்பா, அம்மா, சகாக்களின் படை சூழ அமைந்திருக்கும்; அவர்களே அவளது உலகமாய் இருந்திருப்பர். பின் திருமணம், புது உறவு, புது சொந்தங்கள் என அவளின் வாழ்வு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும்; இச்சமயம், கணவனே அவளின் முக்கிய முன்னுரிமையாய் இருப்பார். பின் தாயாகையில், அவளது, குழந்தை தான், அவளது உலகம், அவளது உயிர் என்றாகிறது.   

குழந்தையை, கவனிப்பதில், வீட்டு சூழல், கணவர் என அனைத்தையும் மறக்கிறாள்; இது பரவாயில்லை, குழந்தை கவனிப்பில், தான் யார் என்பதையே மறந்து, தன் உடல் நலம், மன நலம் இவற்றை முற்றிலுமாக மறந்து விடுகிறாள்.

சிறந்த அன்னையாக முயற்சிக்கையில், அனைத்து அன்னையரும், அனைத்து பெண்களும் மறக்கும் அந்த ஒரு விஷயம், அவர்கள் தான்; அவர்களின் உடல் நலம் தான். குழந்தையை வளர்க்கும் சமயத்தில், நீங்கள் உங்களது வேலை, நண்பர்கள், உங்களது தொழில் ரீதியான முன்னேற்றம் என அனைத்தையும் மறந்து, உங்கள் உடல் நலம் இழந்து வாழ்கிறீர் பெண்களே!

இதுவரை தியாகம் செய்தவையெல்லாம் போதும், இனியாவது உங்கள் உடல் நலத்திலும், மன நலத்திலும் கவனம் செலுத்தி, சமநிலையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..! நீங்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்..!

1. மற்றவர்களையும், பெற்றவர்களையும் கவனிப்பதில், நீங்கள் பசியுடன் வாழாதீர்கள். நீங்களும் நன்றாக, சத்தான காய்கறிகள், பழங்களை உட்கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், அனைவரையும் கவனித்துக் கொள்ள இயலும் என்பதை மறக்காதீர்.!

2. எக்காரணம் கொண்டும் உங்களது நேரத்தை, உங்களது இலக்கினை இழக்காதீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப வாழ்வில் வெற்றி பெறுவதோடு, தொழில் ரீதியான வாழ்விலும் உங்கள் கொடியை உயரப் பறக்கச் செய்ய வேண்டும். உங்கள் இலக்கினை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள், உங்கள் குடும்பத்தின் துணையுடன்..!

3. உடல் நலம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மன நலமும் அவசியம். ஆகையால், உடலை சீராக வைக்க உடற்பயிற்சிகள் மற்றும் மனதை சீராக்க யோகப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்; இதனால், நீங்கள் செய்யும் செயல்களில், உங்களால் ஒருமுகத் தன்மையுடன் ஈடுபட முடியும்..!

4. உங்கள் அழகு மற்றும் உடல் தோற்றத்தில் அக்கறை கொள்ளுங்கள்; நீங்கள் அழகிய தோற்றம் கொண்டிருந்தால் தான், உங்கள் தொழில் முறை வாழ்வில், உங்களால் வெற்றியை ஈட்ட இயலும்; சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உங்கள் தோற்றத்தைக் கண்டே, இந்த கால கட்டங்களில் கொடுக்கப்படுகின்றன என்பதை மறவாதீர்…!!

உங்களை வருத்திக் கொண்டு, குடும்பத்தை உயர்த்துவதில் எப்பயனும் இல்லை; நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் முழுமை அடையாது என்ற உண்மையை உணர்ந்து செயல்படுங்கள்..!!
Tags:    

Similar News