லைஃப்ஸ்டைல்
காச நோயால் பெண்களுக்கு வரும் பாதிப்பு

காச நோயால் பெண்களுக்கு வரும் பாதிப்பு

Published On 2019-10-22 04:53 GMT   |   Update On 2019-10-22 04:53 GMT
காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது, என மருத்துவ வல்லுனர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
காச நோய் என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் கிருமியால் உருவாகும் நோய். இது உலக அளவில் மிகப்பெரும் தொற்று நோயாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,400 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வு. காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி பலோபியன் குழாயையும் பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது, என மருத்துவ வல்லுனர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மைக்கோபாக்டீரியம் கருப்பையை பாதிக்கும்போது அது பிறப்புறுப்புக் காச நோயாக மாறுகிறது. இதனால் குழந்தை கருப்பையில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கரு இறந்துவிடும். ஆண்களைக் காட்டிலும் பல பெண்கள் இந்த பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு இதனால் கருப்பைக் குழாய் மிகவும் அடர்த்தியாக மாறி, கருப்பையில் கருவை உட்செலுத்த முடியாமல் பாதியிலேயே நின்று இயற்கையாகவே கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த மைக்கோபாக்டீரியம், ரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளையும் தாக்குகிறதாம். குறிப்பாக இனப்பெருக்கத்தை நிகழ்த்தக் கூடிய உறுப்புகளான பெலோபியன் குழாய், கருப்பை ஆகிய இடங்களை பாதிக்கிறது என ஆய்வில் கூறுகின்றனர். ஒருவேளை பெண்களுக்கு காசநோய் தாக்கக் கூடிய அறிகுறிகள் தெரிந்தால், குறைந்த அளவில் பெலோபியன் குழாயை பாதித்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நீக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தன்மையையும் ஏற்படுத்திவிடும்.

இதைக் கண்டறிய சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான அடி வயிறு வலி, அதிகப்படியான ரத்தப்போக்கு, அதிக துர்நாற்றம், உடல் உறவிற்குப் பின் ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

2018-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் ஏராளமான இந்தியப் பெண்கள் பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தது. அதுவும் 2011-ம் ஆண்டு 19 சதவீதம் 2015-ம் ஆண்டு 30 சதவீதம் என ஏறுமுகமாகவே இருந்துள்ளது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டிருந்தது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சரி செய்துவிடலாம். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தகுந்த டாக்டர்களை அணுக வேண்டும்.

Tags:    

Similar News