லைஃப்ஸ்டைல்

பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள்

Published On 2017-10-16 04:52 GMT   |   Update On 2017-10-16 04:52 GMT
பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் அபிப்ராயமும், சாப்பாடு பிரச்சினையும் பெண்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளில், பொதுவானது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். சில நாட்கள் நீடிக்கும் ஒரு பிரச்சினை மன இறுக்கமாகக் கருதப்படுகிறது. அவை தானாக சரியாகிவிடும் என்பதால் கண்டுகொள்ளப்படுவதில்லை.

உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிக தூக்கம் அல்லது தூக்கம் குறைவு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும்.

பெரிய செயல்களைச் செய்யும் முன்பு ஒருவருக்கு பீதியும், மனக் கலக்கமும் இருப்பது சகஜம். ஆனால் அந்த பயம் நீங்காமல் தொடர்ந்து இருப்பது உங்களை எச்சரிக்கும் அடையாளங்களாகும். இளம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களில் பலரும் பீதிக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.



பதற்றம், பரபரப்பு, களைப்பு, தூக்கம் வராமை, தொடர்ந்து ஏதேனும் நினைவுகளை அசை போட்டபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மனக்கலக்க கோளாறுகளின் அறிகுறிகள். பயம் உள்ளவர்கள், திடீரென்று பீதியடைவார்கள், அந்த சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மயக்கம் ஏற்படும், உளறுவார்கள், தொண்டை அடைத்துக்கொள்ளும்.

பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் அபிப்ராயமும், சாப்பாடு பிரச்சினையும் பெண்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் சாப்பிடுவது தொடர்பான பொதுவான கோளாறு பசியின்மையாகும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள்.

புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதைத் தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள். இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஆஸ்துமா மற்றும் வகை 1 நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது பசியின்மை ஆகும். எனினும் மெலிந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சினை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News