பெண்கள் உலகம்

ஆபரேஷன் மூலம் அதிகரிக்கும் குழந்தை பிறப்பு: காரணம் என்ன?

Published On 2022-09-03 02:18 GMT   |   Update On 2022-09-03 02:18 GMT
  • சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.
  • இளம் தாய்மார்களிடையே ‘சிசேரியன்’ வழக்கமானதாகி விட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிசேரியன் அல்லது சி-செக்ஷன் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2015-2016 நிதிஆண்டில் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறப்பது 40.9 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இளம் தாய்மார்களிடையே 'சிசேரியன்' வழக்கமானதாகி விட்டது.

இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியின் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா ரெட்டி கூறியதாவது:-

பிரசவ அறையில் தொடர் கண்காணிப்பு, சிசேரியனுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வலி நிவாரணம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அது பாதுகாப்பான வழிமுறைதான்.

பெண்கள், தாமதமாக திருமணம் செய்கிறார்கள் அல்லது 35 வயதில் தாமதமாக கர்ப்பம் தரிக்கிறார்கள். அவர்களுக்கு சிசேரியனை தவிர்க்க முடியவில்லை. சில பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து அவர்களே ஆபரேஷனை விரும்புகிறார்கள்.

இயற்கை பிரசவம், தாய், குழந்தை இரண்டு பேருக்குமே ஆபத்தும், சிக்கலும் நிறைந்தது. இயற்கை பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்க நாள்தோறும் 30 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிளிங் அல்லது நடைபயிற்சி மூலம் இதய துடிப்பை அதிகரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒன்று அல்லது 2 தடவை யோகா வகுப்புகளுக்கு செல்லலாம். சில பெண்களுக்கு மருத்துவ மற்றும் கர்ப்பகால கோளாறுகள் இருக்கலாம். அவர்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள், போதிய புரதம் மற்றும் ஆற்றலை அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News