லைஃப்ஸ்டைல்
இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

Published On 2021-09-11 08:24 GMT   |   Update On 2021-09-11 08:24 GMT
பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் இப்போது அழகியல் விஷயத்தில் இயற்கையை அதிகமாகவே சார்ந்திருக்க தொடங்கிவிட்டார்கள். பக்கவிளைவுகள் இல்லாத அழகிற்கு, இயற்கை மூலிகைகளில் தயார் செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களே சிறந்தது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். அதனால் இயற்கை அழகு சாதனப்பொருட்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் கூந்தலுக்கானவையும், சருமத்திற்கானவையும் முக்கிய இடங்களை வகிக்கின்றன. ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப்போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது ‘ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை’ நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து பெறும் கரோட்டினை முடியிலும், முடிவேரிலும் பூசி இந்த அழகு சிகிச்சையை கொடுக்கிறார்கள். வேரில் இருந்து தொடங்குவதால், ஒவ்வொரு முடியிலும் மோயிஸ்சரைஸ் செய்வதால், கூந்தலுக்கு மென்மையும், ஜொலிப்பும் கிடைக்கிறது.

முதலில் புரோட்டீன் ஜெல்லை முடியின் வேர் பகுதியில் பூசி, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது வேரில் இருந்து செயல்பட்டு முடிக்கு பலம் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் கழித்து கரோட்டின் ஆயில் தேய்க்கவேண்டும். இது முடியை மென்மையாக்கும். ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக மசாஜ் செய்துவிட்டு, அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆவிபிடிக்கவேண்டும். அதன் பிறகு மண்டை ஓட்டு சருமத்தில் கெரா புரோட்டீன் மாஸ்க் பூசவேண்டும். இது கூந்தலுக்கு ஜொலிப்பு தரும். இருபது நிமிடங்கள் கடந்த பிறகு கெரோட்டின் ஷாம்புவும், கண்டிஷனரும் பயன் படுத்தி மண்டைஓட்டு சருமப்பகுதியையும், கூந்தலையும் கழுவ வேண்டும். ஒவ்வொருவரின் கூந்தலுக்கு தக்கபடி இந்த சிகிச்சையை இரண்டு அல்லது மூன்று முறை பெறவேண்டும். இந்த அழகு சிகிச்சையை தொடரும்போதே ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் உண்ணவேண்டும். கூந்தலையும் நன்றாக பராமரிக்கவேண்டும்.

பெரும்பாலான பெண்கள் விளம்பரம் செய்யப்படும் விதவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலே தங்கள் கூந்தல் அடர்த்தியும், வளர்ச்சியும் பெற்றுவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கூந்தலை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே அது ஆரோக்கியமான வளர்ச்சியை பெறும். அதனால் கூந்தலை முதலில் இயற்கையான முறையில் சுத்தமாக பராமரியுங்கள். பின்பு தேவைக்கு தக்கபடி மட்டும் எண்ணெய், ஜெல், கிரீம், ஷாம்பு போன்றவைகளை பயன் படுத்துங்கள்.

இயற்கை ஷாம்புவை நீங்கள் வீட்டிலே தயாரிக்கலாம். ஒரு கிலோ பச்சை பயறு மாவு, வேப்பிலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ, ஒரு கிலோ சீயக்காய்தூள், துளசி இலையை காயவைத்து அரைத்த தூள் அரை கிலோ ஆகியவைகளை கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வையுங்கள். இதனை தேவைக்கு தக்கபடி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கி, ஷாம்புபோல் பயன்படுத்தவேண்டும்.

பொடுகை அகற்றும் பவுடரையும் வீட்டிலே தயாரிக்கலாம். உளுந்து மாவு அரை கிலோ, வெந்தயதூள் கால் கிலோ, உலரவைத்த ஆரஞ்சு தோல் தூள் நூறு கிராம் ஆகியவைகளை கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது அதில் சிறிதளவு எடுத்து அரை கப் நீரில் கலக்கி, அரை மணி நேரம் வைத்திருங்கள். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் தூள் கலந்து தலையை கழுவுங்கள். பொடுகு நீங்கும்.
Tags:    

Similar News