லைஃப்ஸ்டைல்
வெயில் காலத்தில் ஆரஞ்சுப்பழத்தோல் தரும் சரும பாதுகாப்பு

வெயில் காலத்தில் ஆரஞ்சுப்பழத்தோல் தரும் சரும பாதுகாப்பு

Published On 2021-05-20 06:22 GMT   |   Update On 2021-05-20 06:22 GMT
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆரஞ்சுப்பழத்தோலில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் காரணமாக பாகடீரியாக்கள் உருவாக்கும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து அத்துடன் சில பொருட்களை கலந்து வெயில் காலத்திலும் சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

பாதாம் ஸ்க்ரப்

ஆரஞ்சுப்பழத்தோல் பொடியுடன் 20 பாதாம் பருப்புகளை சேர்த்து ரவை பக்குவத்தில் அரைத்து அதை தினமும் சிறிதளவு பாலுடன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.இந்த கலவை சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி பொலிவை ஏற்படுத்துகிறது.

தயிர் கலவை

ஆரஞ்சு பழத்தோல் பொடியுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் கலவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதுடன் சருமத்தில் இறந்த செல்களையும் அகற்றவும் உதவி புரிகிறது. இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

சர்க்கரை ஸ்க்ரப்

வறட்சியான மற்றும் ஈரப்பதமற்ற சருமம் கொண்டவர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி மற்றும் தூய்மையான சருமத்தை பெறலாம்.ஆரஞ்சு தோலை துருவி அதனுடன் சர்க்கரை கலந்து கிண்ணத்தல் எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி விட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பால் ஃபேஸ் மாஸ்க்

இந்த முறை சருமத்தை ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி கொண்டதாக பராமரிக்கவும், மாநிறம் கொண்ட தோற்றத்தை அளிக்க உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இரண்டு ஸ்பூன் அரஞ்சுத்தோல் பொடியுடன் பால் அல்லது பால் கிரீம் மற்றும்  1ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளலாம்.

வேப்பிலை பொடி கலவை

இந்த ஸ்கின் பேக் பருவால் உருவாகும் தொல்லையை அகற்ற உதவுகிறது. ஆரஞ்சுத்தோல் பவுடர் மற்றும் வேப்ப இலை பவுடர் ஆகிய இரண்டையும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேவையானஅளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
Tags:    

Similar News