லைஃப்ஸ்டைல்
அஹனி பிரியாணி

சூப்பரான அஹனி பிரியாணி

Published On 2019-11-18 08:32 GMT   |   Update On 2019-11-18 08:32 GMT
அஹனி பிரியாணி என்கிற வெள்ளை பிரியாணி காயல்பட்டினத்தில் மிகவும் பிரபலமானது. அந்த ஊர் கல்யாண விருந்து மற்றும் சில முக்கிய விருந்துக்கு இந்த பிரியாணிதான் செய்வார்கள்..
தேவையான பொருள்கள் :
 
சிக்கன் - அரை கிலோ
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
பச்சைமிளகாய் - 15
கொத்தமல்லி தழை - 1 கட்டு
புதினா - 1/2 கட்டு
வெங்காயம் - 6
பிரியாணி இலை - 1
உப்பு தேவைக்கு

தாளிக்க :

நெய் - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
இஞ்சி பூண்டு - 3 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பட்டை சிறிதளவு
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
 
அரைக்க தேவையான பொருள்கள் :

முந்திரி - 25 கிராம்
பாதம் - 25 கிராம்
பிஸ்தா - 10 கிராம்
கசகசா - 10



செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நீட்டமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.

சிக்கனுடன் 2 ஸ்பூன் த‌யிர், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க‌வும்.

அடி க‌னமான‌ பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த‌ பின்பு தாளிக்க‌ வேண்டிய‌ பொருட்க‌ளை போட்டு தாளித்த பின்னர்
வெங்காய‌ம், ப‌.மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.

ந‌ன்றாக‌ வ‌த‌ங்கிய‌ பிற‌கு கலந்து வைத்து சிக்கனை போட‌வும்.
 
இத‌னுட‌ன் அரைத்த‌ ந‌ட்ஸ் விழுது, உப்பு சேர்த்து ந‌ன்றாக‌ மூடிப்போட்டு 1/2 மணிநேரம் சிக்கனை வேக‌விட‌வும்.

பிறகு அதில் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும். மேலே கடைசியாக எலுமிச்சை பழத்தினை சுற்றிவரை பிழிந்துவிடவும்.

பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகனமான பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த 15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.

பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும்.

அஹனி பிரியாணி ரெடி.

குறிப்பு :

குறைந்த தணலில் அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது.

பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால் பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News