லைஃப்ஸ்டைல்

அருமையான கருணைக்கிழங்கு கட்லெட்

Published On 2019-05-03 09:51 GMT   |   Update On 2019-05-03 09:51 GMT
கருணைக்கிழங்கில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
கொத்தமல்லி - 2 கொத்து
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் செய்தால் சாப்பிடும் போது விறு விறு என்று இருக்காமல் இருக்கும்.

கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு  பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்..

அடுத்து அதில் மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும். பிறகு அதை வில்லைகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த வில்லைகளை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சூப்பரான கருணைக்கிழங்கு கட்லெட் ரெடி.
Tags:    

Similar News