சமையல்

இப்தார் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி

Published On 2024-03-28 10:01 GMT   |   Update On 2024-03-28 10:01 GMT
  • இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
  • நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வார்கள்.

இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும். முஸ்லிம்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் நோன்பு கஞ்சியை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரி- கால் கிலோ

பாசிப்பருப்பு- 50 கிராம்

பட்டை- 2

ஏலக்காய்- 4

கிராம்பு- 4

பிரியாணி இலை- 1

வெந்தயம்- ஒரு ஸ்பூன்

எண்ணெய்- தேவையான அளவு

நெய்- ஒரு குழி கரண்டி

கொத்தமல்லி, புதினா- ஒரு கைப்பிடி

இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

கேரட்- 1

பச்சை மிளகாய்- 3

சின்னவெங்காயம்- ஒரு கைப்பிடி

பூண்டு- 5 பல்

வெங்காயம்- 1 (நறுக்கியது)

தக்காளி- 4 (நறுக்கியது)

தேங்காய்ப்பால்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும்.

அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம், அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News