பொது மருத்துவம்

பற்களை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

Published On 2024-04-05 09:07 GMT   |   Update On 2024-04-05 09:07 GMT
  • அனைவருமே ஃப்ளோரைடு பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.
  • பிறந்த குழந்தையின் பற்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்.

இன்றைய காலக்கட்டத்தில் நோய் வந்தபிறகு வேதனையோடு சிகிச்சை பெற்றுக்கொள்வதைவிட வருவதற்கு முன்பே பாதுகாத்துக் கொள்வதுதான் ஆரோக்கியத்தின் ரகசியம். அதுவும் நமது உடலில் ஏற்படும் மாறுதல்களையும், நோய்களையும் நாமே உணர முடியும்.

பலதடவை கண்ணாடியின் முன் நின்று நமது முகத்தை ரசித்து பார்க்கும் நாம், நம் பற்களையும் ரசித்துப் பார்க்க வேண்டும். பற்களை நாக்கின் உணர்வினாலும், பற்களை துலக்கும்போதும், கைவிரல்களின் உணர்வினாலும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தற்காப்பு முறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

`தூங்கும்போது பற்களை கடித்துக்கொண்டிருப்பது மற்றும் அதிக சிட்ரிக் அமிலம் உள்ள பானங்கள் அருந்துவதால் பற்களில் தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, 40, 50 வயதாகிவிட்டால் பல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 40 வயது என்றில்லை...

எல்லோருமே காலை, இரவு என இரண்டு தடவை முறையாகப் பல் தேய்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் மவுத் வாஷ்களைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்கள், ஈறுகள் மற்றும் வாயை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். சாஃப்ட் மற்றும் மீடியம் பிரஷ்களை மட்டுமே உபயோகித்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும். கடினமான பிரஷ்களைக் கொண்டு பல் துலக்கக் கூடாது.

பற்களை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய எளிமையான வழிகள் இதோ...

* பல் சொத்தை, பயோரியா போன்ற பல் நோய்கள் வராமல் தடுக்க வாயை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* காலையிலும், இரவு படுக்கப்போகும் முன்பும் ப்ரஷ்ஷின் மூலம் நன்றாக பல்லை துலக்க வேண்டும். பலர் பல் துலக்க வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, கடுமையான அமைப்புள்ள ப்ரஷ்களை வாங்கி தேய் தேய் என்று தேய்த்து பற்களை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். இதனால் கிருமிகள் ஓடுகிறதோ இல்லையோ உங்கள் பற்களில் தேய்மானம் ஏற்பட்டு வலிமை இழந்து போய்விடும் ஜாக்கிரதை.

* குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருமே ஃப்ளோரைடு பற்பசையைப் (பேஸ்ட்) பயன்படுத்துவது நல்லது.

* பிறந்த குழந்தையின் பற்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். பாலுக்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தாய்ப்பாலில்தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, அழகான முகத்தோடு குழந்தையின் முகம்-தாடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு பற்களுக்குள் நோய் வராமலும் தடுக்க தாய்ப்பால் உதவுகிறது.

* பற்களில் ஒட்டிக் கொள்ளக்கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும்.

* காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால், வளரும் குழந்தைகளுக்கு பற்களின் வளர்ச்சி முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கும்.

* எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றையெல்லாம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், அவை பற்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் இருக்கும்.

* சாப்பிட்ட பின்பு வாய்நிறைய தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியே அந்த தண்ணீரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும். துப்பக்கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.

* ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு தேங்காய் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்துவிடுகின்றன.

* பற்களின் இடுக்குகளில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றை எடுக்க 'பல்குச்சி'யைப் பயன்படுத்துவதால், நம் பற்களுக்கும், ஈறுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்குச்சிக்குப் பதிலாக 'டென்டல் ஃப்லாஸ்' எனும் நூலை பயன்படுத்தலாம். இதனால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் எந்த பாதிப்பும் இன்றி பற்களுக்குள் சிக்கிக் கொள்ளும் உணவுத் துணுக்குகளை சுலபமாக அகற்றலாம். சாப்பிடும்போது வாயின் இருபுறமும் சமமாக மென்று சாப்பிடுவது நல்லது.

* புகையிலை, பான்பராக், குட்கா போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இது பல்லை நாறடித்து பிரச்சினை ஏற்படுத்துவதோடு வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

* அதிக சூடான உணவுகளையோ பானங்களையோ, அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதையும் மீறி நம் கண்களுக்கு புலப்படாமல் நம் பற்களின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கிருமிகளை பல் மருத்துவ நிபுணரின் உதவியோடுதான் விரட்ட முடியும். எனவே, ஆறு மாதங்களுக்கொரு முறையாவது பல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

Tags:    

Similar News