பெண்கள் உலகம்
கடுகு

இரத்தத்தை சுத்திகரிக்கும் கடுகு

Published On 2020-06-30 15:15 IST   |   Update On 2020-06-30 15:15:00 IST
கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.
கடுகு சிறுசுதான், ஆனால் அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்து பெருசு. மஞ்சள் வண்ணத்தை வாரி இறைத்ததுபோல, கடுகு வயல் பூத்திருக்கும் அற்புத காட்சியை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த வண்ண வரவேற்பு, வட இந்திய பண்பாட்டில் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்று. அழகாக விரிக்கப்பட்ட மஞ்சள் கம்பளம் போன்ற தோற்றத்தை தரும் மஞ்சள் கடுகு தாவரம், நமது இமயமலை அடிவாரத்தில் பிறந்தது.

தாவரவியல் ரீதியாக பார்த்தால் புரோகோலியும், முட்டைக்கோசும் கடுகுக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால் நம்ப முடியாதுதான். இந்த தாவரம் பராசிகா காய்கறி குடும்பத்தை சேர்ந்தது. இந்த காய்கறிகள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. கடுகில் 40 வகைக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகை மட்டுமே பரவலாக பயிரிடப்படுகின்றன. கருப்பு கடுகு மத்திய கிழக்கு பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலை பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.

கடுகை பற்றி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தாளிப்பதற்கு கடுகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாளிப்பு முறை வட இந்தியாவில் இருந்தே தென்னகம் வந்திருக்க வேண்டும். இன்றைக்கு வட இந்தியாவில் கடுகு பரவலாக பயிரிடப்படுவது மட்டுமில்லாமல், கேழ்வரகுடனும் பயிரிடப்படுகிறது.

கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை கடுகு மூலம் கிடைக்கின்றன. கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை. 

Similar News