லைஃப்ஸ்டைல்
நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவு

கொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவை தேடித்தேடி சாப்பிடும் மக்கள்

Published On 2020-06-15 09:27 GMT   |   Update On 2020-06-15 09:27 GMT
கொரோனா நோய் தொற்றால் கதி கலங்கிப் போயிருக்கும் சென்னைவாசிகள் தங்கள் வீடுகளில் வேப்பிலையை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகளைத் தேடித்தேடி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
தமிழகத்தில் தலைநகர் சென்னை கொரோனாவால் கதி கலங்கிப் போயிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பு அருகில் உள்ளவர்கள் யாராவது இருமினால் ‘உடம்புக்கு என்ன ஆச்சு?‘, என்று நலம் விசாரித்த காலம் போய், இன்று யாராவது இருமினாலோ, தும்மினாலோ அவர்களை விட்டு பல மீட்டர் தூரம் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு காரணியாக வேப்பிலையை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்த தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. தினமும் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலை சாறு, மஞ்சள் கலந்த நீரை தெளித்து விடுகிறார்கள். வீட்டின் கதவுகள், கைப்பிடிகள், ஜன்னல் கம்பிகள் போன்ற அனைத்து இடங்களிலும் வேப்பிலையை சொருகி வைத்து இருக்கிறார்கள். மிளகு, வேப்பிலை, சுக்கு, இஞ்சி கலந்த மூலிகைச் சாறை தினமும் குடித்து வருகிறார்கள். இது தவிர நெருப்பில் வேப்பிலை, சாம்பிராணி தூள் சேர்த்து வீடுகளில் புகை போடுகிறார்கள். பெண்களில் பலர் வேப்பிலையை தலையில் சொருகி செல்கிறார்கள். விதவிதமான பூக்கள் அலங்கரித்த பெண்களின் தலையில் தற்போது வேப்பிலை இருப்பதை பார்க்க முடிகிறது.

இப்படி சென்னைவாசிகளின் வீடுகளில் தற்போது அதிகம் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக வேப்பிலை மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. வீடுகளின் அருகில் வேப்ப மரம் உள்ளவர்கள் தேவையான அளவு வேப்பிலையை பறித்து பயன்படுத்துகிறார்கள். சிலர் பொடி நடையாக சென்று அருகில் உள்ள மரங்களில் வேப்பிலையை பறித்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொருவரின் பையிலும் இன்றியமையாத பொருளாக வேப்பிலை மாறியிருக்கிறது.

பூண்டு, இஞ்சி, மிளகு

அதேபோல உண்ணும் உணவிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பொருட்களை மக்கள் சேர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை சமையலில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தலைவலிக்கு டீ குடித்தால் கூட அதில் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் சுடுதண்ணீர் அருந்துகிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழங்களை அதிகமாக உண்கிறார்கள். அதேபோல ஆடாதொடை இலைகளை பயன்படுத்தி கசாயம் தயாரித்து அடிக்கடி பருகி வருகிறார்கள்.
Tags:    

Similar News