லைஃப்ஸ்டைல்

ஆஸ்துமாவிற்கு அஞ்ச வேண்டாம்...

Published On 2019-05-07 03:23 GMT   |   Update On 2019-05-07 03:23 GMT
ஆஸ்துமா என்றால் அஞ்ச வேண்டாம். ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இலையென்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழலாம். இந்த ஆஸ்துமா ஏன் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
இன்று(மே7-ந் தேதி) சர்வதேச ஆஸ்துமா தினம்.

1956 -ம் வருடம், நவம்பர் மாதம் ஓர் இரவு வேளையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அந்த இளம் மருத்துவன் 82 சக வீரர்களோடு ஒரு சிறிய படகில் பயணிக்கிறான். கடல் இயல்புக்கு மாறாக கொந்தளிக்கிறது. அந்த துரதிர்ஷ்ட வேளையில் அவனை ஆஸ்துமா பாதிக்கிறது. ஆஸ்துமாவை கண்டு அவன் அஞ்சவில்லை. பாசிசத்தை வேரறுக்க செல்லும் வேட்கை அவனுக்கு ‘அட்ரினலின்’ என்ற ஆபத்தான மருந்தை தனக்கு தானே ஊசி மூலம் செலுத்திக்கொண்டு ஒரு மாபெரும் தாக்குதலுக்கு தயாராகிறான். அந்த மருத்துவன் கடந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளன் எர்னஸ்டோ சேகுவாரே. சாதிக்க நினைப்பவர்களுக்கு ஆஸ்துமா தடையில்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணம் சேகுவாரே.

இந்த ஆஸ்துமா ஏன் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செயல்பட பிராணவாயு அவசியம். இந்த பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்து ரத்தத்தில் சேர்ப்பது நுரையீரலின் வேலை. வளிமண்டலத்தில் இருக்கும் காற்றை தசைகுழாய்கள் நுரையீரலுக்கு எடுத்து செல்லும். ஒரு மரத்தின் வேர்களை போல் இருக்கும். இந்த தசைகுழாய்களை மூச்சுகுழாய்கள் என்கிறோம். ஆஸ்துமா நோயில் இந்த மூச்சுகுழாய்கள் சுருக்கமடைகிறது. அவற்றின் உட்சுவர் வீக்கமடைகிறது. மூச்சு குழாய்கள் சுருங்கியவுடன் காற்று செல்வது தடைபட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். மரண வாசலில் நிற்பது போன்று நோயாளி உணர்வார்.

இந்த மூச்சுகுழாய்கள் சுருங்குவதற்கான காரணம் ஒவ்வாமை. அலர்ஜி என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமானால் பரிட்சியமான பொருட்களுக்கு மூச்சுகுழாய்கள் கொஞ்சம் ‘ஓவர் ரியாக்ட்’ செய்வது என்று சொல்லலாம். ஒரு வீட்டிற்குள் பாம்பு நுழைந்துவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அலறுவது இயல்பு. வண்ணத்துப்பூச்சி நுழையும் போதும் இதே அலறலை அவர்கள் மேற்கொண்டால் எத்தனை வினோதமாக அது பார்க்கப்படும். ஏறக்குறைய இதேபோன்ற ஒரு வினோத செயல்பாடு தான் ஆஸ்துமா நோயாளிக்கு மூச்சுகுழாயில் ஏற்படும்.

சுற்றுப்புறத்திலிருக்கும் தூசு, புழுதி, ஒட்டடை என்று ஏதேனும் ஒன்று மூச்சு குழாய்க்குள் சென்றவுடன் ஏதோ ஆபத்தான எதிரி வந்துவிட்டதைபோல் நினைத்து மூச்சு குழாய்கள் சுருங்கி கொள்ளும். எதிரியை அழிக்க வரும் அணுக்கள் சுரக்கும் வேதிபொருட்களால் அதன் உட்சுவர் வீங்கி கொள்ளும். ஒரு சிறு தூசுக்கு இத்தனை அக்கப்போரா என்று தட்டி கேட்க மரபணுக்கள் பழகி இருக்காது. இந்த ஆஸ்துமா ஏற்படுத்தும் காரணியை மருத்துவ உலகம் ஒவ்வா பொருட்கள்(அலர்ஜன்) என கூறுகிறது. இந்த ஒவ்வா பொருட்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் செல்லப்பிராணியின் ரோமத்திலிருந்து, நீங்கள் விரும்பி அடித்த பெயிண்ட் வரை, உங்கள் தோட்டத்து மலர்களின் மகரந்த துகள்களிலிருந்து, நீங்கள் ஆன்லைனில் வாங்கிய பொருட்கள் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒருவருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே தனக்கு எது அலர்ஜி உண்டு பண்ணுகிறது என்பதை ஆஸ்துமா நோயாளிகள் கண்டறிந்து அதனை தவிர்ப்பதே ஆஸ்துமாவை கட்டுப்படுத்த கூடிய சிறந்த வழி. உலக அளவில் தற்போது ஆஸ்துமா பெருகி வருகிறது.

சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு முக்கிய காரணியாக இருந்தாலும், வாழ்வியல் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் நிகழந்துள்ள மாற்றங்களும் முக்கியமாக சொல்லப்படுகிறது. நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் முறைமையை நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பாற்றல் என்று வகைபடுத்தலாம். இவ்விரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சமநிலையில் இருக்கவேண்டும்.

நம் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து ரோபோக்களை போல மாற்றி வருகிறோம். மண்ணில் விளையாட விடுவதில்லை, வெயிலோ, மழையோ பட அனுமதிப்பதில்லை. ‘சானிடைசர் லோசன்’ கொண்டு பலமுறை கை கழுவ வேண்டும், வெளிநாட்டு பொம்மைகள் மட்டுமே அவர்கள் விளையாட, பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மட்டுமே சாப்பிட, இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் தத்து பிள்ளைகளாக அவர்களை மாற்றிவிட்டோம். ‘இன்பெக்‌ஷன்’ ‘இன்பெக்‌ஷன்’ என்று பயமுறுத்தும் டி.வி. விளம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டோம். விளைவு அவர்கள் இயற்கை தொற்றுக்கு ஆட்படாமல் வளர்கிறார்கள். எனவே மேலே சொன்ன ஒவ்வாமை ஆக்கிரமிப்பு அதிகமாகி வேலை செய்ய தொடங்கி உள்ளது. நம் குழந்தைகள் கொஞ்சம் இயற்கையோடு இணைய செய்வோம். அலர்ஜியிலிருந்து அவர்களை விடுவிப்போம்.

ஒவ்வா பொருட்கள் ஏற்படுத்திய சுருங்கிய மூச்சுகுழாய்க்குள் சென்றுவரும் காற்று ஒரு வித ஒலி எழுப்பும் (நாதஸ்வரம் போல). இந்த ஒலியை ‘வீசிங்’ என்கிறோம்.

மருத்துவரின் நோக்கமெல்லாம் சுருங்கிய மூச்சுகுழாய்களை விரித்து விடுவதாக இருக்கும். அதற்கான மருந்துகளையே பரிந்துரைப்பார். இந்த மருந்துகள் நிரந்தரமாக தீர்வு கொடுக்குமா என்றால் இல்லை. மீண்டும் அந்த அலர்ஜன் வரும்போது மூச்சுகுழாய் சுருங்கி கொள்ளும். அப்படி என்றால் என்னதான தீர்வு. ஆஸ்துமாவிற்கான சர்வதேச அமைப்பு சில வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி ‘இன்ஹேலர்’ மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொண்டால் ஆஸ்துமா பற்றி கவலை இல்லாமல் நிம்மதியாக வாழலாம். ‘இன்ஹேலர்’ மருந்துகள் ஆபத்தானவை, நீண்ட நாட்கள் உபயோகப்படுத்த கூடாது என்ற கூற்று தவறே.

ஆஸ்துமா என்றால் அஞ்ச வேண்டாம். ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இலையென்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழலாம். ஆஸ்துமாவிற்கு நிரந்தர தீர்வு என்று கூறிக்கொண்டு சில நபர்கள் டி.வி.யிலும், பத்திரிகையிலும் விளம்பரம் செய்து ஏமாற்றி வருகிறார்கள். அதிகப்படியான ஸ்டீராய்டு கலவைகளை நோயாளிகளுக்கு அளித்து ஆபத்து ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வி.பி.துரை, துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்), கன்னியாகுமரி மாவட்டம்.
Tags:    

Similar News