லைஃப்ஸ்டைல்

கை, இடுப்பு வலியை குணமாக்கும் அர்த்தகடி சக்கராசனம்

Published On 2017-02-06 08:20 GMT   |   Update On 2017-02-06 08:20 GMT
கை, தோள் பட்டை, இடுப்பு வலியிலிருந்து விடுபட எளிய ஆசனம் உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை பார்க்கலாம்.
பக்கவாட்டில் வளைந்த தோற்றம். 'அர்த்த’ என்றால் பாதி, 'கடி’ என்றால் இடுப்பு. 'சக்கர’ என்பது சக்கரம். ஆசனத்தின் உச்ச நிலையில் உடல் பக்கவாட்டில் அரைச் சக்கர வடிவத்தில் இருக்க வேண்டும்.  

செய்முறை:

விரிப்பில் நேராக நின்றுகொண்டு வலது கையை, வலது பக்கவாட்டில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி மேலே உயர்த்தவும். கை, காதைத் தொட்டவுடன் மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி இடது பக்கம் சரியவும். சிறிது நேரம் சீராக மூச்சு விட்டபடி நிற்கவும்.

மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நேராக நிமிர்ந்து வரவும். பின் மூச்சை வெளிவிட்டபடி கையைக் கீழே இறக்கவும். ஐந்து முறை செய்தல் நலம்.

இதேபோல், இடது கையைத் தூக்கி மறுபக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள் :

இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கை, தோள் வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

எச்சரிக்கை: ஆசனம் செய்யும்போது கைகளை மடக்கவோ, முட்டியை மடக்கவோ கூடாது. இதய நோய் இருப்பவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்றுச் செய்ய வேண்டும்.

Similar News