லைஃப்ஸ்டைல்
அதிகப்படியான பாராட்டும்... குழந்தைகளின் மனச்சோர்வும்....

அதிகப்படியான பாராட்டும்... குழந்தைகளின் மனச்சோர்வும்....

Published On 2021-08-10 03:32 GMT   |   Update On 2021-08-10 07:42 GMT
பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்த பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாகப் பிரித்து நடத்துகிறார்கள்.

விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளை எல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்துவிடுகின்றனர். சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர்.

நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் அதிகப்படியாக புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.

ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடி சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.

ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும் என்கிறார்கள்,
குழந்தை
கள் மனநல வல்லுனர்கள்.

குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக்காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
Tags:    

Similar News