லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு

குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு

Published On 2021-05-06 04:31 GMT   |   Update On 2021-05-06 04:31 GMT
குழந்தைகளுக்கு காசநோய் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம்.
பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது. குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது. ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.

இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை ‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.

இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்கு காசநோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.

அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.

இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும். பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும், கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகாத வண்ணம் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News