பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு டீ, காபி எப்போது கொடுக்கலாம்?

Published On 2018-02-15 08:41 IST   |   Update On 2018-02-15 08:41:00 IST
டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும்.
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.

டீயில் 2 சதவீத கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருள் ஆகும். நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.



டீ ஒரு டைரெடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலைப்பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும். டீ நேரடியாகவும், மறைமுகமாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.

டீயில் உள்ள அல்கலாய்டு பொருட்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரும்புச் சத்து பற்றாக்குறை என்ற வகை ரத்தச் சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும்.

Similar News