பெண்கள் உலகம்

பள்ளியில் இருந்து தொடங்கட்டும் ‘சாலை பாதுகாப்பு’

Published On 2018-01-01 11:55 IST   |   Update On 2018-01-01 11:55:00 IST
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் பெற்றோரும், ஆசிரியரும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆண்டு தோறும் பாதுகாப்பான பயணம் குறித்தும், சாலை பாதுகாப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திடும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைப் பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘விபத்தில்லாத தேசம்’ என்ற திட்டத்தோடு, ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. சாலையை பயன்படுத்துவோரின் அலட்சியமே 90 விழுக்காடு விபத்துக்கு காரணம் என்று இந்தியாவிலும் உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வளரும் நாடுகளில் ஏற் படும் அதிகப்படியான விபத்துக்கு காரணம் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.

“சாலை விதிகளை மதிப்போம்

மரணத்தை தவிர்ப்போம்”

வேகமாய் செல்வதை தவிர்க்கவேண்டும். சாலைகளில் செல்லும்போது கவனத்தை சிதறவிடும் செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்கு வரத்தை கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டு சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு..

* குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் பெற்றோரும், ஆசிரியரும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

* சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது நம்முடைய பாதுகாப்புக்காகவும்தான். ஆகையால், சாலை விதிகளை ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

* சாலை விதிகள் என்ன, அவற்றை எப்படிச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள சின்னங் களுக்கு என்ன அர்த்தம்? ஆகிய விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

* போக்குவரத்துக் காவலர், சிக்னல் விளக்குகள் உள்ள இடங்களில் போக்கு வரத்துச் சின்னங்களின் கட்டளைகளான நிற்க, வழிவிடு சின்னங்கள் இருப்பின், அந்த இடங்களில் நின்று, இருபக்கமும் பார்த்து எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்புதான் சாலையை கடக்க வேண்டும்.

* பள்ளிக்கு நடந்து செல்பவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும்.

* சைக்கிளில் செல்லும்போது வலது-இடது திசை பார்த்து கவனம் சிதறாமல் சைக்கிளை ஓட்டிச்செல்லவேண்டும்.

* முன் செல்லும் வண்டியினை முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

* தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவைகளுக்கு தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

* போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.

* வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்டவேண்டும்.

* மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு பற்றி தெரிந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

Similar News