லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முறை

Published On 2017-12-14 03:36 GMT   |   Update On 2017-12-14 03:36 GMT
குழந்தைகள் போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவை திணிக்கிறார்கள். இது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது.
குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கிறார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்... போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவை குழந்தைக்கு திணிக்கிறார்கள். இது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது.

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்கிரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும்? அதற்காக மாலை நேர ஸ்நாக்ஸ் வேண்டாம் என்பதில்லை உணவுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.



பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு போதுமானது என்பதே தெரிவதில்லை. தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சினை உண்டாகிறது. குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும்.

வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைக்கு வெளியில் இருந்து உணவு அல்லது குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தரும் உணவை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
Tags:    

Similar News