பெண்கள் உலகம்

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?

Published On 2017-12-13 12:07 IST   |   Update On 2017-12-13 12:07:00 IST
விரல் சூப்பும் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்தலாம் அல்லது நிறைய கூடுதல் அன்பு செலுத்தி, பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.
குழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை, இப்பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால், குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். 



ஐந்து, ஆறு வயதில் இப்பழக்கம் இருந்தாலும், மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிவர். இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே, விரல் சூப்பும் பழக்கம் மாறும். 

நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும். விரல் சூப்பும் குழந்தையிடம், அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய சிரமத்தை எடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு விபரம் தெரிந்த உடன், விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாய படுத்துவதோ அல்லது அவர்களை துன்புறுத்துவதோ கூடாது. 

அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி திருத்தலாம் அல்லது நிறைய கூடுதல் அன்பு செலுத்தி, பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம். எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால், விரல் சூப்பும் பழக்கத்தை மறந்து விடுவர்.

Similar News