பெண்கள் உலகம்

குழந்தைகளின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பது எப்படி?

Published On 2017-09-27 12:08 IST   |   Update On 2017-09-27 12:08:00 IST
பெற்றோர்கள் சுயகட்டுபாட்டுடன் இருந்து, குழந்தைகள் கண் எதிரில் புத்தகம் படித்தால்தான் அவர்களும் புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்.
படிப்பதையே சிரமமாக நினைக்கும் குழந்தைகளுக்கு, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது சவாலான விஷயம்தான். ஆனால், பெற்றோர் கொஞ்சம் மனதுவைத்தால், அந்த ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்.

* சிறு வயது முதலே குழந்தைகளுக்குப் பிடித்த விலங்குகள், பழங்கள், பொதுஅறிவு தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிமையான படக்கதைகளாக சொல்லிக்கொடுப்பது, அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். ஆரம்பக் கட்டத்திலேயே கருத்துள்ள விஷயங்களைப் படிக்கச் சொன்னால், குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால், அவர்களுக்குப் பிடித்தமான ஸ்பைடர்மேன், கார்ட்டூன் படங்கள், பிக்சர் கார்டுகள் வாயிலாக வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பியுங்கள். பின்னர், அவர்களாகவே ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிடித்த விஷயங்களைப் படித்து, படித்ததை மற்றவர்கள் முன்னிலையில் ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால், ஆர்வமாகப் படிப்பார்கள். இதனால், ஒருவர் கற்றுக்கொண்ட விஷயம், எளிதாக மற்றவர்களுக்கும் தெரியவரும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு, அறிவியல், பொதுஅறிவு, சுற்றுலா என ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகைய துறை சார்ந்த, அத்துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் பற்றிய புத்தகங்கள், அவர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.



* அழகாகக் காட்சிப்படுத்துவதும், அலங்கரிப்பதும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். வீட்டிலேயே அழகான வடிவில் ஒரு ரேக் அமைத்து அதில் குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால், புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே வரும். மேலும், குழந்தைகள் ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர், அவர்கள் படித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும்போது உற்சாகமாவார்கள்.

* தினமும் வாசிப்பு நேரம் எனக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து, மற்றவர்களிடம் பகிரலாம். குழந்தைகள் படித்ததில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அப்படிச் செய்யும்போது அப்பா, அம்மாவே படிக்கிறார்கள். நம்முடன் சந்தோஷமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என ஆர்வமுடன் குழந்தைகளும் படிப்பார்கள்.

* தினமும் காலை நேரங்களில் செய்தித்தாளை படித்து முடித்ததும், முக்கியமான செய்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பல விஷயங்களையும் அவர்களிடம் விவாதிக்கலாம். தொடர்ந்து குழந்தைகளை செய்தித்தாளைப் படித்து தங்களிடம் விவாதிக்குமாறு சொல்லலாம்.

* செய்தித்தாள்களில் பார்த்த, பயனுள்ள, பிடித்த படங்களுடன் கூடிய விஷயங்களைக் கத்தரித்து, தனி நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது பார்க்கச் சொன்னால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியே நல்ல விஷயங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள்.

* ஓய்வு நேரங்களில் அல்லது மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்துச்சென்று பெற்றோரும் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். குழந்தைகளையும் நூலக உறுப்பினராக்கி, அவர்களுக்குப் பிடித்த நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கப் பழக்கப்படுத்தலாம்.

Similar News