லைஃப்ஸ்டைல்

குழந்தைகளிடம் உள்ளதை சொல்வோம்.. நல்லதை செய்வோம்..

Published On 2017-09-06 04:57 GMT   |   Update On 2017-09-06 04:57 GMT
குழந்தைகளிடம் வெளிப்படும் பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் மன நலனை ஓரளவு யூகித்துவிடலாம்.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர் காண்பிக்கும் அக்கறை அவர்களின் உடல்நலன் சார்ந்ததாக மட்டும் இருக்கக்கூடாது. குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் உடல்நலனில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை யூகித்துவிட முடியும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் முடியும். ஆனால் குழந்தைகளின் மனநலனில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை வெளிப்படையாக தெரியாது. அதனை உடனுக்குடன் அறிந்து கொள்வதும் கடினமான விஷயம். ஆதலால் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் மீதும் கவனம் பதிக்க வேண்டும்.

குழந்தைகளிடம் வெளிப்படும் பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் மன நலனை ஓரளவு யூகித்துவிடலாம். குழந்தைகள் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவர்களின் பழக்கவழக்கங்களில் அவை பிரதிபலிக்கும். நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்படும். குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென்று வலம் வருவதற்கு சிந்தனையும், செயலும் போட்டிப்போட்டுக்கொண்டு செயல்படுவதே காரணம்.

தாங்கள் பார்க்கும் விஷயங்களை மனதில் உள்வாங்கிக்கொண்டு அப் படியே திரும்ப செய்து பார்க்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக வெளிப்படும். அதிலும் பெற்றோர் எதை சொன்னாலும், செய்தாலும் அதன்படியே செயல்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப பெற்றோர் குழந்தைகள் மனதில் நல்ல விஷயங்களை புகுத்த வேண்டும். நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். அவைகள் குழந்தைகளின் மன நலனை மேம்படுத்துமாறு அமையவேண்டும். அதற்கேற்ப குழந்தைகள் மனதை கவரு கின்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். நல்லவைகளை குழந்தைகள் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.



ஒருபோதும் அவர்களின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. குழந்தைகளால் செய்ய முடியாத விஷயமாகவே இருந்தாலும், வழிமுறைகளை கற்றுக்கொடுத்து அதனை செய்து பார்க்க தூண்ட வேண்டும். பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவும் பட்சத்தில் தன்னுடைய வரம்பை தானே புரிந்து கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

அதன்பின்பு ஒரு விஷயத்தை செய்து பார்க்க தொடங்கும் முன்பே தன்னால் அதனை செய்து முடிக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தாமாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். தனக்கு சாத்தியமாகும் காரியங்களை தேர்வு செய்யும் பக்குவம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும். அதன் மூலம் தங்களுடைய திறமைகளை தாங்களே மதிப்பீடு செய்யும் மனோபாவம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

தன்னால் ஒரு காரியத்தை செய்து முடிக்க முடியாது என்பதை ஆரம்பத்திலேயே உணரும்போது, அதனை செய்து முடிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதன் பிறகு சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு அக்காரியத்தை செய்து முடிப்பதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். தொடர்ந்து முயற்சித்தால் எதுவும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் தோன்றும். சுயமாகவே சிந்தித்து செயல்படுபவர்களாகவும் தங்களை வளர்த்து கொள்வார்கள்.
Tags:    

Similar News