பெண்கள் உலகம்

உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா?

Published On 2017-08-07 14:31 IST   |   Update On 2017-08-07 14:31:00 IST
நீங்கள் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம்.
உங்கள் குழந்தைக்கு போனில் விளையாடுவது தான் ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் ஆம் என்பதே. நீங்களும் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம்.

நாம் வீட்டு வேலை செய்து கொண்டிருக்குமு்போது நம்மை வந்து தொந்தரவு செயய்க்கூடாது என்பதற்காக கையில் நாம் போனைக் கொடுத்து விளையாடு என்று சொல்லிவிடுகிறோம். அந்த நேரத்தில் வேண்டுமானால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். உங்களுக்குத் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதனால் என்னென்ன விளைவுகள் உண்டாகுமென்று தெரியுமா உங்களுக்கு?

அவர்களுடைய பிடிவாதத்தை சமாளிக்க, குறும்புத்தனத்தை அடக்க என எந்த காரணத்துக்காக கொடுத்தாலும் அது தீங்கில் தான் முடியும்.  குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடுவது குறையும். அதனால் என்ன? என் குழந்தை வீட்டிலேயே இருக்கிறது என்றால், அது உங்கள் அறியாமையை வெளிக்காட்டுகிறது. உங்கள் குழந்தை வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.

இதனால் உங்கள் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருப்பார்கள். போனில் விளையாடும் போது இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும்.



குழந்தைகள் போனில் விளையாடுவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களை விளையாடும் போது, உங்கள் போனிலிருந்து வெளிவரும் அதிகப்படியான வெளிச்சம், குழந்தையின் கண்களை பாதித்து பார்வை கோளாறை ஏற்படுத்தும். கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகள் மிக மென்மையானதாக இருக்கும். அதனால் அவர்களின் மூளை எளிதில் அனைத்தையும் உள்வாங்கும். அப்படி உங்கள் குழந்தை விளையாடும் போது, அவர்களின் மூளை அதற்கு அடிமையாக துவங்கும். அதோடு போனைச் சுற்றியிருக்கும் அதிர்வலைகள் உங்கள் குழந்தையின் மூளையில் பல பிரச்சனைகளை உண்டாகும்.

உங்கள் குழந்தைகள் போனில் விளையாடுவதற்கு அதிக நேரம் செலவிடுவார்கள். நீங்களும் உங்களுக்கு தொந்தரவு தரவில்லை என்று நினைத்து விட்டுவிட்டால், பிரச்சனை அங்கே தான் ஆரம்பமாகிறது. உங்கள் குழந்தையின் உலகம், அவர்களும் செல்போனும் தான் என்ற குறுகிய இடைவெளிக்குள் தனிமைப்படுத்தப்படும். இதனால் அவர்கள் வெகு விரைவில் மனநிலையில் மாற்றம் அடைவார்கள்.

குழந்தைகள் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், அது அவர்கள் கல்வியை மிகவும் பாதிக்கும். அவர்களது மூளை அந்த விளையாட்டை உள்வாங்கி இருப்பதால், அவர்களது கவனம் கல்வியை நோக்கி பயணிக்க மறுக்கும். அதனால் அவர்கள் படிப்பில் மந்தமடைய துவங்குவார்கள்.

உங்கள் போனில் உள்ள விளையாட்டுகளை நீக்கிவிடுங்கள். அது முடியவில்லை என்றால், உங்கள் குழந்தை என்ன அடம்பிடித்து கேட்டாலும் கொடுக்காதீர்கள். அவர்கள் உடல்ரீதியாக விளையாட அனுமதியுங்கள். அதற்கு தேவையானவற்றை வாங்கி கொடுங்கள். அவர்களுடன் நேரம் செலவிட முயற்சியுங்கள். யோகா, கராத்தே, உடல் பயிற்சிகள் மற்றும் பரதம் என இன்னும் குழந்தைகள் ஆரோக்கியமாகக் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றுள் குழந்தைகளுக்கு விருப்பமானதை செய்ய அனுமதியுங்கள்.

Similar News