கால்பந்து

சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடம்- சாதனை படைத்த சுனில் சேத்ரி

Published On 2023-06-22 05:13 GMT   |   Update On 2023-06-22 05:13 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
  • இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது.

பெங்களூரு:

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ஜூலை 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

இதில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழைக்கு மத்தியில் இந்த போட்டி அரங்கேறியது.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தொடர்ச்சியாக 3-வது கோலை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச போட்டியில் அவர் அடித்த 90-வது கோலாக இது பதிவானது.

இதன் மூலம் சுனில் சேத்ரி (90 கோல்கள், 138 ஆட்டங்கள்) சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மலேசியாவின் மோக்தார் தஹாரியை (89 கோல், 142 ஆட்டங்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் (200 ஆட்டங்கள்) முதலிடத்திலும், ஈரானின் அலி டாய் (109 கோல்) 2-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி (103 கோல்) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் அதிக கோல்கள் அடித்த ஆசிய வீரர்களில் சுனில் சேத்ரி 2-வது இடம் வகிக்கிறார்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது. 

Tags:    

Similar News