கால்பந்து

உற்சாகத்தில் மொராக்கோ வீரர்கள்

நாக் அவுட் சுற்றை உறுதி செய்த மொராக்கோ, குரோஷியா: பரிதாபமாக வெளியேறியது கனடா

Published On 2022-12-01 17:23 GMT   |   Update On 2022-12-01 17:23 GMT
  • குருப்-எப் பிரிவில் மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
  • கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.

கத்தார்:

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், குரூப்-எப் பிரிவில் உள்ள கனடா, மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி, 4வது நிமிடம் மற்றும் 23வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோல்களை ஹக்கிம் ஜியேச், யூசப் யென்-நெசிரி அடித்தனர். அதன்பின்னர் 40வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கனடா வீரர் நயீப் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் மொராக்கோ அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கனடா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்சம் ஆட்டத்தை சமன் செய்துவிட வேண்டும் என்றும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சியை மொராக்கோ வீரர்கள் முறியடித்தனர். அதேசமயம் அவர்களும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2-1 என மொராக்கோ அணி வெற்றி பெற்றது. அத்துடன், குருப்-எப் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.

குரூப்-எப் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, பெல்ஜியம் அணிகள் விளையாடின. இப்போட்டியின் இறுதி வரை இருஅணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கோல் இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 புள்ளிகளுடன் குரோஷியா அணி நாக் அவுட் சுற்றை உறுதி செய்தது.

Tags:    

Similar News