வழிபாடு

என்ன! அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்ய வேண்டுமா...?

Published On 2024-04-14 06:11 GMT   |   Update On 2024-04-14 06:11 GMT
  • அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்க கூடாது.
  • தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

அன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான்.

அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும்.

அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா?

உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான்.

க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.

அந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.

அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி செய்யக் கூடாது.

ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்குரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல.

திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

அட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.

Tags:    

Similar News