வழிபாடு

இன்று மாசி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-02-20 06:36 GMT   |   Update On 2023-02-20 06:36 GMT
  • வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
  • இன்று மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோவிலுக்கு அமாவாசை தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இன்று மாசி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவில் மற்றும் குளக்கரையில் குவிந்தனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோவில் குளக்கரையில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலில் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் மற்றும் மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு வீரராகவர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தெப்ப உற்சவத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், கோவில் குளத்தைச் சுற்றி வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கட்சி அளிப்பார்.திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் ராஜாஜிபுரம் காளமேகம் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன், ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவில், புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல்நல்லாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News