வரதராஜ பெருமாள் கோவிலில் ரூ.20 லட்சத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
- கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
- தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.
பண்ருட்டி காந்தி ரோட்டில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுவது சிறப்பாகும்.
ஆனால் தேர், சிதலமடைந்ததால் கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. எனவே புதிய தேர் செய்து, தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.
இதையடுத்து புதிய தேர் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ரூ.10 லட்சம் ஒதுக்கியது. மேலும் நன்கொடையாக ரூ.10 லட்சம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.20 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது புதிய தேர் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.
இந்த புதிய தேர் வெள்ளோட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. கோவிலில் இருந்து தொடங்கும் தேர் வெள்ளோட்டம், காந்தி ரோடு, ராஜாஜி ரோட்டில் நடக்கிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணியை பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலைவாணி மதியழகன், கிருஷ்ணராஜ், பிரபு, லோகநாதன், செல்வகுமார், கோபி, சுரேஷ், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா மற்றும் கோவில் குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.