நாளை பெருமாள் ஆசி தரும் திருவோண விரத தினம்
- சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
- பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
பெருமாளுக்கு உகந்த இரண்டு மிக முக்கியமான விரதங்கள் ஏகாதசியும், திருவோணமும். இவற்றில் ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரு முறையும், திருவோணம் ஒரு முறையும் வரும். ஏகாதசி விரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவோண விரதம் பற்றி பலருக்கும் தெரியாது. இதனால் மிக சிலர் மட்டும் திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருப்பது உண்டு.
முருகப் பெருமானுக்கு எப்படி திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் விரத நாட்களாக கருதப்படுகிறதோ, அதே போல் பெருமாளுக்குரிய நட்சத்திர விரதம் தான் திருவோணம். இது பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் விரதம் ஆகும்.
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை அவர் எடுத்தது திருவோணம் நட்சத்திர நாளில் தான். நட்சத்திரங்களில் "திரு" என பெருமைப்படுத்தி சொல்லப்படும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெருமாளுக்குரிய திருவோணமும், சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் தான்.
வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் அவதாரம் எடுத்தது திருவோண நட்சத்திர நாளில் தான் வாழ்வில் வளர்ச்சியையும், சகலவிதமான நலன்களையும் தரக்கூடியது திருவோண விரதம் ஆகும். பெருமாளுக்கு நெருக்கமானவராகவும், பிரியமானவராகவும் ஆக வேண்டும் என்றால் திருவோண விரதம் இருக்கலாம்.
ஏகாதசியை போல் திருவோண நட்சத்திரம் வரும் நாட்களிலும், நாள் முழுவதும் கடுமையான விரதத்தை பக்தர்கள் மேற்கொள்வார்கள். பெருமாளின் அருளை வேண்டி இருக்கப்படும் இந்த விரதம் மகிழ்ச்சி, செல்வ வளம், முன்னேற்றம், மோட்சம் ஆகியவற்றை தரக் கூடியதாகும்.
அது மட்டுமல்ல வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை தரக் கூடியது திருவோணம் விரதம் ஆகும். பெருமாளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கடந்த கால பாவங்கள், தவறுகளில் இருந்து மன்னிப்பு கிடைப்பதற்கும், ஆன்மிகம் ஞானம் பெறுவதற்கும், தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் வழியை ஏற்படுத்தக் கூடியது திருவோணம் விரத நாளாகும்.
நாளை திருவோண விரதம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும். ஏகாதசி விரதத்திற்கு கடைபிடிக்கும் விரத முறைகளை இதற்கும் கடைபிடிக்க வேண்டும்.
உணவை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், வழிபாடு, மந்திர ஜபம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேர பெறுவதற்கு இந்த திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். திருவோண நட்சத்திரம் பெருமாளின் நட்சத்திரம். நீங்கள் இந்த திருவோண நட்சத்திரத்திற்கு விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது நல்லது.
சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு அப்பம் செய்து நெய்வேத்தியம் செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போட்டு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறதா. அங்கு செல்லுங்கள். பெருமாளுக்கு 12 வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.
கொஞ்சமாக துளசி இலைகள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழத்தை தானம் செய்து விடுங்கள். உங்களுடைய தீராத நோய்நொடி தீர இந்த தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி விடுவார்கள். பிரசாதமாக இரண்டு இலைகளை மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த பச்சை கற்பூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொஞ்சம் பணம் வைக்கும் பெட்டியில், பூஜை அறையில், சமையலறையில் மசாலா டப்பாவுக்கு பக்கத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வையுங்கள்.
இப்படி வீட்டில் எல்லா இடத்திலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பச்சைக் கற்பூரத்தை வைத்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா. நாளை (சனிக்கிழமை) கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கணக்கே கிடையாது.
நாளை நேரம் கிடைக்கும்போது, ஓய்வு கிடைக்கும் போது, படுக்கும் போது, தூங்கும் போது, இந்த நாமத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். அந்த வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைக்க இந்த ஒரு வார்த்தை மட்டுமே போதும்.