வழிபாடு

திருமலையை அழகு செய்யும் ஏழு வித அம்சங்கள்

Published On 2022-06-19 01:30 GMT   |   Update On 2022-06-19 01:31 GMT
  • ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
  • திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன.

ஏழு மலைகள்

திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

ஏழு நாமங்கள்

பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி.

ஏழு தீர்த்தங்கள்

திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம்,

சுவாமி புஷ்கரணி என்பவைதான் அவை.

ஏழு தலை ஆதிசேஷன்

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் 'பெத்தசேஷ வாகனம்' என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

ஏழு மகிமைகள்

திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்ர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.

ஏழு கலச ராஜகோபுரம்

திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வது போல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு முக்கிய இடங்கள்

கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சனேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.

Tags:    

Similar News