வழிபாடு

சிம்ம வாகன வீதிஉலா நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா

Published On 2023-05-29 06:07 GMT   |   Update On 2023-05-29 06:07 GMT
  • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று அனந்த சுவாமி அலங்காரத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று நரசிம்மம். பாதி மனித உருவம், பாதி சிங்க உருவத்துடன் தூணில் இருந்து வெளிப்பட்டவர். தன்னை சரண் அடைந்தால் தீய சக்திகளிடம் இருந்து காப்பேன் என்று உணர்த்தவே மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கங்கணபட்டர் ஏ.பி. சீனிவாசதீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் மோகன் ராவ், ஆய்வாளர் தனஞ்சயலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News