வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-11-21 04:57 GMT   |   Update On 2022-11-21 04:57 GMT
  • நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது.
  • கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.

முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

நெய், பால், தயிர், தேன், மஞ்சள்நீர் ஆகியவற்றை பாத்திரங்களில் வைத்து, பரவாசுதேவர், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசா, பத்மநாபன், தாமோதரன் ஆகிய தெய்வங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டது. சதுர் வேதங்கள் பாராயணம் நடந்தது. தங்கக்கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்த பின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வரும் திரளான பக்தர்களுக்கு விரிவான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை, இரவு வேளையில் நடக்கும் வாகனச் சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்யலாம், என்றார்.

Tags:    

Similar News