வழிபாடு

யாகசாலை மண்டபம் தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 27-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-23 07:25 GMT   |   Update On 2023-03-23 07:25 GMT
  • இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.
  • இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 8 உப கோபுரங்களுடனும், 3 தளங்களுடனும், அஷாடங்க திவ்ய விமானம் அமையப்பெற்ற இக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. இரவு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், நாளை காலை இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் காலை யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 26-ம் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் இரவு பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News