தீவினை அழித்து வெற்றி தரும் திருச்செந்தூர் முருகன்
- முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும்.
- முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கடற்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார். தன்னிடம் வேண்டி வந்தவர்களின் தீவினைகளை அழித்து வெற்றி அருளுகிறார் இறைவன்.
கோவிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி காட்சி அளிக்கிறார். உற்சவர்களாக ஜெயந்திநாதர், சண்முகர், குமரவிடங்க பெருமான், அலைவாயுகந்த பெருமான் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், பார்வதி தேவி, சுவாமி வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹார மூர்த்தி, பாலசுப்பிரமணியர், மயூரநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சனி பகவான், பைரவர், அருணகிரிநாதர் என அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவருக்கு 'ஜெகநாதர்' என்று பெயர். மூலவருக்கு நடைபெறும் அனைத்து அபிஷேகம் மற்றும் கால பூஜை, தீபாராதனை இவருக்கும் நடைபெறும். முருகனின் வலது கையில் தாமரை மலர் இருக்கும். தாமரை மலரால் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். மூலவருக்கு பின்புறம் சிறுபாதை வழியாக சென்றால் அங்கு பஞ்சலிங்கம் (5 லிங்கம்) இருக்கிறது.
கோவில் வளாகத்தில் வள்ளிக்குகையின் அருகே உள்ள சந்தனமலையில் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய மஞ்சள் கயிறும், குழந்தை இல்லாத தம்பதியர் தொட்டிலும் கட்டி வழிபடுகிறார்கள். மேலும் 'குரு தலம்' என்று அழைக்கப்படும் இக்கோவில் முக்கிய பரிகார தலமாகவும் விளங்குகிறது. குருப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக் கணக்கான பக்தர்கள் மூலவர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவார்கள். கோவிலில் தங்க கொடிமரம், செப்பு கொடிமரம் என 2 கொடிமரங்கள் உள்ளன.
முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மாசி மற்றும் ஆவணி திருவிழா 7-ம் நாள் மாலை மூலவரின் உற்சவரான சுவாமி சண்முகர், வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாகவும், 8-ம் நாள் அதிகாலை வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு அணிந்து பிரம்மா அம்சமாகவும், அன்று பகல் வள்ளி - தெய்வானையுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். எனவே முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
கந்தசஷ்டி திருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். 6-ம் நாள் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறும். 7-ம் நாள் இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதேபோல் பங்குனி உத்திர தினத்தன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
கோவிலில் ஆண்டுதோறும் 2 வருஷாபிஷேக விழா நடைபெறும். சுவாமி மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான தை உத்தர தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான தமிழ் மாதம் ஆனியில் மற்றொரு வருஷாபிஷேகம் நடைபெறும்.
ஆலயத்தில் மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது. முருகப்பெருமானின் மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி ஆகிய சன்னிதிகள் புதிதாக கோவில் நாழிக்கிணறு அருகே கட்டப்பட்டு வருகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் கோவிலில் 2.7.2009-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பந்தலில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
7-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்களுக்கும், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.