வழிபாடு

வசந்தத்தை வரவேற்கும் தமிழ் வருடப்பிறப்பு

Published On 2023-04-14 08:40 IST   |   Update On 2023-04-14 08:40:00 IST
  • சித்திரை மாதத்தில் பல தெய்வீக விஷயங்களும் நடைபெற்றுள்ளன.
  • தமிழ் வருடப்பிறப்பு அன்று, தான தருமங்கள் செய்வது வழக்கம்.

14-4-2023 தமிழ்ப் புத்தாண்டு

தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது தமிழ் வருடப்பிறப்பு. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. தமிழ் வருடப்பிறப்பானது, 'சித்திரை விஷூ' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். 'விஷூ' என்பதற்கு, 'இரவும் பகலும் சமமானது' என்று பொருள்.

இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். இது தவிர லட்சுமி கடாட்சமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசிக்கு வருவார். இப்படி சூரியன் மேஷ ராசியில் பயணிக்கத் தொடங்கும் நாளே 'தமிழ் வருடப்பிறப்பு' என்று அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதம் பிறந்ததுமே 'இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அதே போல் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை சொல்லும் இயற்கையின் வெளிப்பாடு இது.

சித்திரை மாதத்தில் பல தெய்வீக விஷயங்களும் நடைபெற்றுள்ளன. சித்திரை மாத திருதியை நாள் ஒன்றில்தான், மகாவிஷ்ணு தனது தசாவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை எடுத்தார். சித்திரை மாத பவுர்ணமியில்தான் எமதர்மனிடம் கணக்கராக இருந்து, மக்களின் பாவ- புண்ணியங்களை எழுதும் சித்ரகுப்தன் தோன்றினார். சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் லட்சுமிதேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வச் செழிப்பு உண்டாகும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவிழாவாக பார்க்கப்படும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு சித்திரை மாத பவுர்ணமி தினத்தில்தான் நடைபெறும்.

சித்திரை முதல் நாள் அன்று, நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். எனவே புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து பரிகாரங்களை செய்துகொள்ளலாம்.

தமிழ் வருடப்பிறப்பு அன்று, தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடித்ததும், பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு வைக்க வேண்டும். அந்த கோலத்தின் மீது தட்டு ஒன்றில் வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள் உட்பட அனைத்து ஆபரணங்களையும், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருட்களையும் தெய்வத்தின் முன்பாக இருக்கும்படி வைக்க வேண்டும்.

மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் வீட்டின் மூத்த பெண்மணி எழுந்து குளித்து பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றிவைக்க வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பாக அழைத்துச் சென்று, தெய்வத்தின் முன்பாக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களை பார்க்கச் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால், வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை விஷூ நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப்படும் 'மருந்து நீர்' தேய்த்து நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும். மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.

பொன் வைக்கிற இடத்தில் பூ

'பொன் வைக்கிற இடத்தில் பூ வையுங்கள்' என்ற பழமொழியை, நமது பெரியவர்கள் சொல்ல பலரும் கேட்டிருக்கலாம். இந்த வழக்கு மொழி எப்படி வந்தது தெரியுமா? சித்திரை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் குபேரனுக்கு உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் 108 தங்கம் அல்லது வெள்ளிக்காசுகளால் மகாலட்சுமியை அர்ச்சித்து 'லட்சுமி குபேர பூஜை' செய்தால் வாழ்விற்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை பகவான் கொடுப்பதில்லை. எனவே வசதி இல்லாதவர்கள் தங்க காசுகளுக்கு பதிலாக 108 பூக்களால் பூஜித்தாலே போதும். அந்த பலன் கிடைத்து விடும். இதை முன்னிட்டு வந்ததே அந்தப் பழமொழி.

மஞ்சள் நீராடுதல்

சித்திரை மாதத்திற்கு 'சைத்ர மாதம்' என்ற பெயரும் உண்டு. சைத்ர மகரிஷி பிறந்த மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது. மிகவும் புண்ணிய மாதமான சித்திரை, அம்மனுக்கு உகந்தது. எனவேதான் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வெயில் கூடுதலாக இருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து நம்மை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்விழாவின்போது மஞ்சள் நீராட்டு விழா நடத்துகின்றனர்.

நான்கு முக நடராஜர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நடராஜர், நான்கு முகங்களுடன் வித்தியாசமான கோலத்தில் உள்ளார். இவரை 'குஞ்சிதபாத நடராஜர்' என்கின்றனர். இவரது பாதத்திற்கு கீழே முயலகன் இல்லை. சித்ரா பவுர்ணமிஅன்று இவர் பரத்வாஜ முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவரை வழிபட்டால் குறைவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கிரிவல நாள்

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி வாய்ந்தது. எனவே அன்றைய தினம் சத்யநாராயணர் மற்றும் சித்ரகுப்தரை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். இந்நாளில் கிரிவலம் வருவதால் உடம்புக்கு புதுத்தெம்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பு. இந்த நாளில் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதைக் காண முடியும்.

Similar News